டெல்லியில் மோடியுடன் 1 மணி நேரம் ஆலோசனை நடத்திய ஜெ.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை, பிரதமர் நரேந்திர மோடியை அவரது ரேஸ் கோர்ஸ் இல்லத்தில் வைத்து சந்தித்தார். இதற்காக சென்னையிலிருந்து இன்று காலை தனி விமானத்தில் அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றிருந்தார் ஜெயலலிதா.
ஜெயலலிதா தனி விமானத்தில் இன்று காலை 11 மணியளவில் சென்னையிலிருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டார். அவரது விமானம் மதியம் 1.30 மணியளவில் டெல்லி சென்று சேர்ந்தது.
விமான நிலையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தலைமைச் செயலாளர் ராம மோகன்ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், அதிமுக எம்.பிக்கள், ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திலிருந்து ஜெயலலிதா கார் வெளியே வந்தபோது, அதன்மீது பூ தூவி வரவேற்பு வழங்கப்பட்டது.

டெல்லியில் தமிழ் நாடு இல்லத்தில் ஓய்வெடுத்து மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்து கார் மூலம், மாலை 4.40 மணிக்கு டெல்லி ரேஸ் கோர்ஸ் ரோட்டில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு சென்றார் ஜெயலலிதா.
மோடிக்கு பச்சை நிற சால்வையும், பூங்கொத்தும் கொடுத்து வாழ்த்து தெரிவித்த ஜெயலலிதா, தமிழக திட்டங்கள் தொடர்பான 29 கோரிக்கைகள் அடங்கிய மனுவை நரேந்திர மோடியிடம் வழங்கினார்.
இதன்பிறகு இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர். ஜல்லிக்கட்டு விளையாட்டை திரும்ப கொண்டுவர நடவடிக்கை, காவிரி குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதை தடுக்க வேண்டும், மருத்துவ நுழைவு தேர்வில் தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் அதில் இடம் பெற்றிருந்தன.
சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு ஜெயலலிதா மோடியிடம் விடைபெற்று கிளம்பினார்.












Click it and Unblock the Notifications