பிரதமர் மோடியுடன் நாளை ஜெ. சந்திப்பு: அ.தி.மு.க. எம்.பி.க்கள் இன்று டெல்லி பயணம்!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் ஜெயலலிதா நாளை சந்தித்து பேச உள்ள நிலையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் இன்று டெல்லி செல்ல இருக்கின்றனர். டெல்லி வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், புதிய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக முதல்வர் ஜெயலலிதா நாளை டெல்லி புறப்பட்டு செல்கிறார். காலை 11.30 மணியளவில் தனி விமானத்தில் செல்லும் அவர், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார்.
முதல்வர் ஜெயலலிதா டெல்லி வருகையையொட்டி, தமிழ்நாடு இல்லம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும், டெல்லியில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
முன்னதாக, தேர்தலில் வெற்றி பெற்ற 37 அ.தி.மு.க. எம்.பி.க்களும், ஏற்கனவே உள்ள 10 ராஜ்யசபா எம்.பி.க்களும் இன்று டெல்லி புறப்பட்டு செல்கின்றனர்.
இதுதவிர, தமிழக மூத்த அமைச்சர்கள், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜக்கையன் மற்றும் உயர் அதிகாரிகளும் டெல்லி செல்கின்றனர். முதல்வர் ஜெயலலிதாவுக்கு டெல்லி விமான நிலையத்திலும், தமிழ்நாடு இல்ல வாயிலிலும் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்குபெற கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் டெல்லி செல்கின்றனர்.
டெல்லி வரும் முதல்வர் ஜெயலலிதா, பிற்பகலில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது, தமிழக வளர்ச்சிக்கு தேவையான நிதியை ஒதுக்கித்தர மனு ஒன்றையும் அவரிடம் அளிக்கிறார்.
அதன்பிறகு, அன்று மாலையே முதல்வர் ஜெயலலிதா சென்னை திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications