ஆண்டிப்பட்டியில் ஆரம்பித்து அந்தமான் வரை 8 மாநிலங்களில் 5 நாட்கள் 'அம்மா' பிறந்த நாள் கொண்டாட்டம்!
சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளை 5 நாட்கள் கொண்டாட கட்சித்தலைமை உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டங்கள் அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.
முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பிப்ரவரி 24ம் தேதி தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் கடந்த வாரம் முதலே தமிழகத்தில் களைகட்டிவிட்டது. 21ம் தேதி முதல் தீவிரமடைந்த கொண்டாட்டம், 22ம் தேதியும், 24ம் தேதியும் உச்சக்கட்டத்தை எட்டியது.
கட்சியின் சின்னமான இரட்டை இலை பொறிக்கப்பட்ட பிரமாண்டமான 68 கிலோ கேக்கும், கூடவே லட்டுக்களும், கட்சிக்காரர்களுக்கு ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் வைத்து விநியோகிக்கப்பட்டது.

அன்னதானம்
அம்மா உணவகங்களில் சர்க்கரைப் பொங்கலுடன் 3 வேளையும் இலவச உணவு விநியோகம் செய்யப்பட்டது. கட்சி தலைமையகத்தில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களுக்கும் உணவு இலவசமாக வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் கோவில்களில் வடை பாயாசத்துடன் அன்னதானம் வழங்கப்பட்டது.

எங்கும் எதிலும் ஜெ
அதிமுக மகளிர் அணியினர் முந்தானையில், ஜெயலலிதா படத்துடன் அதன் கரையில் கட்சி கொடியின் நிறங்களும் நெய்யப்பட்ட சேலைகளை அணிந்து கட்சி தலைமையகத்தின் வீதிகளில் பெண்கள் வலம் வந்தனர்.
மருத்துவ முகாம்
புதுக்கோட்டையில் இலவச மருத்துவ முகாமை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். அந்த முகாம் 24 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. ஜெனரல் செக் அப், இரத்த தானம், இரத்த அழுத்த பரிசோதனை, ஆகியவற்றுடன் இசிஜி மற்றும் எக்கோ ஸ்கேன்களும் எடுக்கப்படும்.

அம்மா ஸ்டிக்கர் குழந்தைகள்
கோயம்பத்தூர் மற்றும் திருச்சி மாநகரங்களில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. அதில் குழந்தைகளுக்கு போர்த்தப்பட்ட துண்டில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.

1000 பேர் பச்சை குத்தல்
வேளச்சேரியில் நேற்று முன்தினம், நடந்த பச்சை குத்தல் விழா அதில் ஒன்று. சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் தங்கள் கைகளில் தமிழக முதல்வரும், அதிமுக தலைவருமான ஜெயலலிதாவின் படத்தை, பெயருடன், தங்கள் கைகளில் பச்சை குத்தி கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த எம்.எல்.ஏ அசோக்கும் கையில் பச்சை குத்தி கொண்டார்.

8 மாநிலங்களில் கொண்டாட்டம்
தமிழகத்தில் 32 மாவட்டங்களில் மட்டுமல்லாது ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டங்கள் அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன. அப்போ தமிழ்நாடு மட்டுமல்ல 8 மாநிலங்களிலும் 5 நாட்களும் இனி ஜெ பிறந்தநாள் கொண்டாட்டத்தால் அலறப்போகிறது.
கட்சித்தலைமை உத்தரவு
தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களிலும் பிறந்தநாள் கொண்டாட்ட பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி அதன் விபரங்களை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை எம்.பி. அறிக்கை வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications