இணைந்த தீபா மாதவன்... இனி நாட்டை காப்பாற்றுவதே லட்சியமாம்!
பிரிந்திருந்த தீபாவும் மாதவனும் இப்போது இணைந்து விட்டார்கள். இருவரும் இணைந்து இரு கண்களாய் இருந்து நாட்டை காப்பாற்ற போகிறார்களாம்.
சென்னை: வருங்கால முதல்வர் தீபா அம்மா வாழ்க...இந்த வாழ்த்து இப்போது புதிதாக தி. நகரில் தீபா வீட்டில் இருந்து கேட்க ஆரம்பித்திருக்கிறது. காரணம் தீபாவும் மாதவனும் இணைந்து விட்டார்கள். இரு கண்கள் போல நாட்டு மக்களை காப்பாற்றுவார்களாம். என்னடா இந்த தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஜெயிலுக்கு போனதில் இருந்தே பல அரசியல் கட்சி தலைவர்களுக்கு முதல்வர் ஆசை வந்து விட்டது. குமாரசாமி புண்ணியத்தில் ஜெயிலில் இருந்து விடுதலையாகி வந்து மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா.
சட்டசபை தேர்தலில் பிரச்சாரத்தின் போதே முதல்வராக கனவு கண்டவர்களை தூங்க வைத்து விட்டு மீண்டும் ஜெயித்து முதல்வரான ஜெயலலிதா, சில மாதங்களிலேயே உடல்நலக்குறை ஏற்பட்டு மரணமடைந்தார்.

தீபாவின் வருகை
ஜெயலலிதா மரணம் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியது என்னவோ உண்மைதான். ஆனால் அதற்காக ஆள் ஆளுக்கு நாட்டாமை செய்ய ஆரம்பித்து விட்டனர். சசிகலா முதல்வர் கனவில் வலம் வர ஆரம்பித்தார். அவரை பிடிக்காதவர்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை நாடினர்.

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை
எம்ஜிஆர் பிறந்தநாளில் தனி கட்சி தொடங்குவதாக கூறிய தீபா எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்று ஒரு இயக்கத்தை தொடங்கி தொண்டர்களை சேர்த்தார். பணமும் வசூலித்தார். அவரது நல்ல நேரம் பணம் கோடிக்கணக்கில் வசூலானது என்கின்றனர்.

மாதவன் தீபா
தீபாவும் பால்கனியில் நின்று தன்னை பார்க்க வந்தவர்களிடம் பேசி கை தட்டல் வாங்கினார். டிவிகளில் பேட்டியும் கொடுத்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டி போட்டு பிரச்சாரமும் செய்தார். ஆனால் உள்கட்சி பிரச்சினையில் அவரது கணவரே தீபாவிடம் இருந்து பிரிந்து தனியாக கட்சி தொடங்கினார். ஒரே வீட்டில் இருந்து கொண்டு தனித்தனியாக செயல்பட்டனர்.

வெளியேறிய மாதவன்
என்ன நினைத்தாரோ ஒருநாள் தீபாவின் வீட்டில் இருந்து மாதவன் வெளியேறினார். அதன்பிறகு மாநிலம் தோறும் முக்கிய நகரங்களில் கட்சியை வளர்க்க கூட்டம் போட்டார் மாதவன். தனது பெயரை மாதவன் தீபா என்றும் மாற்றினார்.

போயஸ் தோட்ட வீட்டில் பாதுகாப்பு
சில மாதங்கள் இருவரும் பிரிந்து இருந்தனர். திடீரென போயஸ் தோட்டத்து வீட்டிற்கு வந்து தீபா உரிமை கொண்டாடினார். தீபாவின் தம்பி தீபாக்கை திட்டியதுதான் ஹாட் டாபிக். அப்போது தீபாவிற்கு பாதுகாப்பாக வந்து மீண்டும் இணைந்தார் மாதவன்.
அண்ணா பிறந்தநாள்
அண்ணா பிறந்தநாளான நேற்று அண்ணா சிலைக்கு தீபா மாலை போட போன போது டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தீபாவை முற்றுகையிட்டு செய்த ரகளை மாதவனை யோசிக்க வைத்திருக்க வேண்டும். மீண்டும் தீபா வீட்டிற்கு வந்து விட்டார் மாதவன்.

நாங்களும் இணைந்து விட்டோம்
தீபா வீட்டிற்கு மாதவன் வந்து விட்டார் என்று கூறி உடனே தி. நகரில் தீபா வீட்டின் முன்பாக கூட்டம் கூடியது. தீபா ஆதரவாளர்கள், மாதவன் ஆதரவளர்கள் என குவிந்தனர். அப்போது அங்கிருந்தவர்கள் பேசியதுதான் சுவாரஸ்யமான விசயம்.

தமிழ்நாட்டுக்கு நாமதான் முதல்வர்
ரெண்டு பேர் ஒண்ணு சேர்ந்துட்டாங்க... ஓபிஎஸ்ஆவது... ஈபிஎஸ் ஆவது... எல்லாமே நாமதான். நம்ம ஆட்சிதான். வருங்கால முதல்வர் வாழ்க. தீபா அம்மா வாழ்க என்று உணர்ச்சி வசப்பட்டு உற்சாகத்தில் முழக்கமிட்டார் ஒருவர்.

அம்மா வழிநடத்துவார்
பால்கனியில் நின்று தீபா பேச ஆரம்பித்தார். நீங்க விரும்பியபடியே எல்லா நல்ல நிகழ்ச்சிகளும் நடக்கிறது. அம்மா நம்முடன் இருந்து வழி நடத்துவார். இனி எல்லாமே நல்லதாகவே நடக்கும். எல்லோருக்கும் நன்றி என்று கூறினார் தீபா.

மரியாதைக்குரிய மாதவன் சார்
நாங்க இணைவதை பார்க்க! இவ்வளவு நேரம் காத்திருந்த உங்களுக்கு நன்றி. நாங்க இணைந்து இந்த இயக்கத்தை எவ்வளவு வலு படுத்த முடியுமோ அந்த அளவிற்கு வலு படுத்துவோம்.
இரண்டு கண்கள்
எல்லோரும் பத்திரமா வீட்டுக்கு செல்லுங்க. அனைவருக்கும் அம்மாவின் ஆசி இருக்கிறது. அம்மாவின் ஆன்மா நம்மை வழி நடத்தும்.
இது மிகப்பெரிய பலம் என்று கூறினார். அப்போது ஒருவர், தீபாவும் மாதவனும் இணைந்து விட்டார்கள், இரண்டு கண்களாய் இருந்து நாட்டு மக்களையும் நம்மளையும் பாதுகாக்க இருக்கிறார்கள் என்று ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டார்.












Click it and Unblock the Notifications