ஜெயலலிதா பேசுகிறார் - அப்பல்லோ அறிக்கை வெளியிட்ட நாள் இன்று!
தீவிர சிகிச்சைக்குப் பிறகு முதல்வர் ஜெயலலிதா நன்றாகப் பேசி வருவதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கடந்த ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது.
சென்னை: ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதியன்று அறிக்கை வெளியிட்டது அப்பல்லோ.
நுரையீரல், இதயம், சர்க்கரை நோய் சிகிச்சை தொடர்பான மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து முதல்வரின் உடல்நிலையைக் கண்காணித்து வருவதாகவும், பிசியோதெரபி சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அப்பலோ மருத்துவமனை, அக்டோபா 10ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது. 11 நாட்களுக்குப் பின்னர், அக்டோபர் 21ஆம் தேதியன்று அறிக்கை வெளியிட்டது.
ஜெயலலிதாவிற்கு தீவிர சிகிச்சை
செப்டம்பர் 22ஆம் தேதி உடல்நலக்குறைவினால் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் கண்காணித்தனர். அவர் நன்றாக குணமடைந்து வருவதாகவும், மிகவிரைவில் பூரண உடல் நலத்துடன் வீடு திரும்பி, மக்கள் நலப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வார் என்றும் அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
ஜெயலலிதா அபாய கட்டம்
அக்டோபர் 6ஆம் தேதி, அப்போலோ மருத்துவமனையில் இருந்து வெளியான அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நுரையீரல் பிரச்னை, செயற்கை சுவாசம் அளிக்கப்படுவது, நோய்த் தொற்றுப் பிரச்னைகள் இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருந்தன. பாசிவ் பிசியோதேரபி அளிக்கப்படுகிறது என்று சொல்லப்பட்டது.
ராகுல்காந்தி, வெங்கையாநாயுடு, மு.க. ஸ்டாலின் என வரிசையாக அப்பல்லோவிற்கு வந்து ஜெயலலிதாவின் உடல் நலன் பற்றி விசாரித்து சென்றனர்
சமூக வலைத்தளங்களில் வதந்தி
அக்டோபர் 10 ஆம் தேதியன்று ஜெயலலிதா உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டது அப்பல்லோ அதன்பின்னரே ஜெயலலிதா அபாய கட்டத்தில் இருக்கிறார் என்றே அனைவருக்கும் தெரியவந்தது. ஜெயலலிதா உடல்நிலை குறித்த வதந்திகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. வதந்தி பரப்பியதாக பலர் கைது செய்யப்பட்டனர்.
தொண்டர்கள் பிரார்த்தனை
தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் முதல்வர் நலன்பெற வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். முருகன் மற்றும் துர்க்கையம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள், நடத்தினர். யாகங்கள், ஹோமங்களில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்று மனமுருக பிரார்த்தனை மேற்கொண்டனர்.
இன்சார்ஜ் ஆன ஓபிஎஸ்
இதனையடுத்து ஆளுநர் மாளிகையில் இருந்து மிக முக்கிய அறிவிப்பு ஒன்று அக்டோபர் 11ஆம் தேதியன்று வெளியானது. நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அமைச்சரவைக் கூட்டங்களுக்கும் தலைமை வகிப்பார். முதல்வர் ஜெயலலிதா தனது பணிகளுக்குத் திரும்பும் வரை இது நீடிக்கும். முதல்வர் பதவியில் ஜெயலலிதா நீடிப்பார் என்று ஆளுநர் மாளிகை அறிக்கை கூறியது.
அறிக்கை வெளியிட்ட அப்பல்லோ
அக்டோபர் 10ஆம் தேதி வெளியிட்ட அறிக்கைக்குப் பின்னர் 11 நாட்கள் அமைதி காத்த அப்பல்லோ அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு, முதல்வர் ஜெயலலிதா நன்றாகப் பேசி வருவதாக கூறப்பட்டது.
உடல்நிலையில் முன்னேற்றம்
ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், நுரையீரல், இதயம், சர்க்கரை நோய் சிகிச்சை தொடர்பான மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து உடல்நிலையைக் கண்காணித்து வருவதாகவும், பிசியோதெரபி சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது அந்த அறிக்கை.
சடலமாக திரும்பிய ஜெயலலிதா
நவம்பர் 3ஆம் தேதியன்று உடல்நலத்தில் முன்னேற்றம் என அப்போலோ அறிவித்தது. அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டியும் இது குறித்து பேட்டியளித்தார். ஜெயலலிதாவின் நுரையீரல் தொற்று சரியாகி சுவாசக் குழாயின்றி மூச்சு விடுவதாக அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி கூறினார். தான் பணிக்கு திரும்ப காத்திருப்பதாக திடீரென ஜெயலலிதா கையெழுத்துடன் கடிதம் வெளியானது. இது எதுவுமே நடக்கவில்லை, கடைசியில் சடலமாகவே மருத்துவமனையில் இருந்து டிசம்பர் 5ஆம் தேதி போயஸ் கார்டன் திரும்பினார் ஜெயலலிதா.