முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வைக் குழு அமைத்த மோடிக்கு நன்றி- ஜெ. கடிதம்
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பிரதமருக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அதில், அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த மேற்பார்வைக்குழு அமைத்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தற்போதைய தென் மேற்கு பருவ மழைக் காலத்திலேயே, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் நடவடிக்கையை அணை மேற்பார்வைக் குழு நிறைவேற்றும் என தான் நம்புவதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் உத்தரவு
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில்,
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த மேற்பார்வை குழு அமைக்க உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் 7ஆம்தேதி உத்தரவிட்டது.
பிரதமருக்கு நன்றி
இதுதொடர்பாக கடந்த மாதம் 3-ம் தேதி தான் பிரதமரிடம் வலியுறுத்தியதன் அடிப்படையில், மத்திய அமைச்சரவையில் இந்த விவகாரம் ஆலோசிக்கப்பட்டு விரைவான நடவடிக்கை எடுத்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
நீர்வளத்துறை அமைச்சகம் ஆணை
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் வகையில், அணை மேற்பார்வைக் குழுவை நியமித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் வெளியிட்ட ஆணையை தமது அரசு பெற்றுக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
தென்மேற்கு பருவமழை காலத்தில்
தற்போதைய தென் மேற்கு பருவ மழைக் காலத்திலேயே, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் நடவடிக்கையை அணை மேற்பார்வைக் குழு நிறைவேற்றும் என தான் நம்புவதாகவும் அந்த கடிதத்தில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.