காவிரி.. இவருக்கு முதலில் நன்றி சொல்வோம்... ஜோதிமணி "நச்" கருத்து!
சென்னை: காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு சாதகமாக இன்று தீர்ப்பு வந்துள்ளதற்கு முக்கியக் காரணமே மன்னார்குடி ரங்கநாதன்தான் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி. அவருக்கு தனது பேஸ்புக்கில் நன்றியும் தெரிவித்துள்ளார்.
காவிரிப் பிரச்சினை பல காலமாக விடாமல் துரத்தி வரும் தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சினை. எத்தனையோ வழக்குகள், எத்தனையோ தீர்ப்புகள்.. ஆனாலும் இன்றும் பஞ்சாயத்து தீர்ந்தபாடில்லை. மாறாக இரு மாநில உறவுகளையும் பாதிக்கும் அளவுக்கு பிரச்சினை புரையோடிப் போய்க் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் முக்கியத் தீர்ப்பாக, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கெடு விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தமிழகத்திற்குக் கிடைத்த மிக முக்கிய வெற்றியாக விவசாயிகள் பார்க்கிறார்கள். இது நடந்தால் தமிழக விவசாயிகளுக்கு மிகப் பெரிய புண்ணியமாகப் போகும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.
இந்த நிலையில் இந்த வெற்றிக்கு உண்மையான காரணம் இவர்தான் என்று கூறி கரூர் ஜோதிமணி தனது முகநூலில் ஒரு பதிவு போட்டுள்ளார். அது இதுதான்..
"தனியொரு மனிதராக காவிரிப் பிரச்சினையை உச்சநீதிமன்றம் வரை முன்னெடுத்து வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தீர்ப்புக்கு காரணமாக இருந்த மன்னார்குடி ரங்கநாதன். அவரது வழக்கில்தான் தமிழக அரசு பிறகு வாதியாக சேர்ந்துகொண்டது. எளிய மனிதர்களே பெரிய போராட்டங்களை முன்னெடுத்து வெற்றியும் காண்கிறார்கள்.அவருக்கு நன்றியும், வாழ்த்துகளும்"