உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அலமேலு நடராஜன் மரணம்!
Recommended Video
கோவை: உடுமலைப்பேட்டையில் தலித் இளைஞர் சங்கர் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில், அவர் காதல் திருமணம் செய்த கவுசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை விதித்து, நாட்டையே திரும்பி பார்க்க வைத்த நீதிபதி அலமேலு நடராஜன் இன்று மரணமடைந்தார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்த சங்கர் என்ற தலித் இளைஞரும், திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த கவுசல்யா என்ற வேறு ஜாதியை சேர்ந்த இளம் பெண்ணும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து கவுசல்யா வீட்டில் இந்த திருமணத்திற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி இவர்கள் 2 பேரும் உடுமலை பஸ் நிலையத்திற்கு சென்ற போது, பைக்கில் வந்த கும்பல் சங்கர் மற்றும் கவுசல்யாவை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த சங்கர் பரிதாபமாக இறந்தார். காயத்துடன் உயிர் தப்பிய கவுசல்யா சிகிச்சைக்கு பிறகு அதிருஷ்டவசமாக உயிர் தப்பினார்.
11 பேர் கைது
உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கூலிப்படை மூலம் கொலை செய்ததாக கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, மாமன் பாண்டித்துரை, மற்றும் செல்வகுமார், மதன், ஜெகதீசன், மணிகண்டன், கலை தமிழ்வாணன், மற்றொரு மணிகண்டன், தன்ராஜ், பிரசன்ன குமார் ஆகிய 11 பேரை கைது செய்தனர்.
தந்தை சின்னச்சாமி, தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை ஆகிய மூவரும் குண்டர் சட்டத்திலும் கைதுசெய்யப்பட்டனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
ஆறு பேருக்கு அதிரடி மரண தண்டனை
ஓராண்டாக இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்த நிலையில், 1500 பக்கத்திற்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டது. கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 8 பேர் குற்றவாளிகள் என கடந்த டிசம்பரில் நீதிபதி அலமேலு நடராஜன் தீர்ப்பளித்தார். தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டிதுரை, பிரசன்ன குமார் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். அதேநேரம், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, சின்னசாமியின் நண்பர் ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், கலை தமிழ்வாணன், மதன் ஆகிய ஆறு பேருக்கு பிரிவு 302ன் கீழ் மரண தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
பெரிய வழக்கு
ஸ்டீவன் தன்ராஜ்க்கு இரட்டை ஆயுள் தண்டனையும், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தந்த மணிகண்டனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார். இந்த தீர்ப்பு நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆணவ கொலைக்காக ஒரே நேரத்தில் 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது நாட்டிலேயே இதுதான் முதல் முறை என வரலாற்றில் பதிவானது.
நீதிபதி மரணம்
இப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி அலமேலு நடராஜன் இன்று மரணமடைந்தார். திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறலையடுத்து அவர் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். கோவை மாவட்டம் போத்தனூரில் பிறந்த அலுமேலு நடராஜன், பள்ளி படிப்பை, திருச்சி செயின்ட் ஜோசப் பள்ளியிலும், சட்டப்படிப்பை திருச்சி சட்டக் கல்லூரியிலும் முடித்தார். 1991ம் ஆண்டு நீதித்துறையில் காஞ்சிபுரம் மாஜிஸ்திரேட்டாக பதவியேற்ற அவர், மாவட்ட நீதிபதியாக கோவையிலும், பின்னர் வேலூரிலும் பணியாற்றியுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு, முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதியாக திருப்பூரில் பொறுப்பேற்றார் அலமேலு நடராஜன். நீதிபதிகள் மட்டுமல்லாது வழக்கறிஞர்களோடும் இனிமையாக பழகக்கூடியவர் என்று வழக்கறிஞர்கள் நெகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.