மீண்டும் தகராறு வந்தால் தேர்தலை நிறுத்திவிடுவேன்!- எச்சரித்த தேர்தல் அதிகாரி
சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் மீண்டும் தகராறு ஏற்பட்டால் தேர்தலை நிறுத்திவிடுவேன் என்று தேர்தல் அதிகாரி நீதிபதி பத்மநாபன் எச்சரித்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியும், விஷால் தலைமையிலான மற்றொரு அணியும் போட்டியிட்டு வருகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 3139 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் 783 பேர் தபால் மூலம் வாக்களித்துள்ளனர். இதுதவிர, இதுவரை 2200 பேர் நேரில் வந்து வாக்களித்துள்ளனர்.
ஆக மொத்தம், இதுவரை நடிகர் சங்க தேர்தலில் தபால் வாக்குளையும் சேர்த்து 3000 பேர் வாக்களித்துள்ளனர். இந்த தேர்தல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதையடுத்து, வாக்குகள் எண்ணும் பணி தொடரும். இன்று இரவுக்குள் இறுதி முடிவு எடுக்கப்பட்டு விடும்.
இந்நிலையில், தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது திடீரென இருதரப்பினருடைய வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது.
இதுகுறித்து, தேர்தல் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் கூறுகையில், "நடிகர் சங்க தேர்தலில் இரு அணிகளைச் சேர்ந்தவர்கள் மீண்டும் தகராறில் ஈடுபட்டால் தேர்தல் ரத்து செய்யப்படும்," என்றார்.
தற்போது நடிகர் சங்க தேர்தலில் ஏற்பட்ட பரபரப்பு நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாகவும், தேர்தல் சுமூகமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.