தேர்தல் தோல்விக்குப் பின் திமுகவில் பாய்ந்துள்ள புது ரத்தம் –அன்பழகன்
சென்னை: லோக்சபா தேர்தல் தோல்விக்கு பிறகு திமுக பெரும் எழுச்சி பெற்றுள்ளது என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட திமுக சார்பில் பெரியார் சிலை அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், "திமுக பாரம்பரியம் மிக்க கட்சியாகும். திடீரென்று ஆட்சிக்கு வந்த கட்சி அல்ல.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி சாதனையால் கிடைத்த வெற்றி கிடையாது. தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் மக்களை ஏமாற்றி 144 தடை உத்தரவை பிறப்பித்து வெற்றிபெற்றுள்ளார்கள்.
இன்றைக்கு தேர்தல் ஆணையம் கூட பழைய கருவிகளை ஒதுக்கி வைத்துவிட்டு புதிய கருவிகளை கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறது. தோல்விக்கு பின்னர் திமுக மிகப்பெரிய எழுச்சியை பெற்றுள்ளது.
எதிர் கட்சியினர் சட்டப்பேரவையில் பேச வாய்ப்பே அளிப்பது கிடையாது. வருங்காலத்தில் நல்லதொரு சமுதாயம் அடைந்திடவும், தமிழினத்தை காத்திடவும் நாம் என்றைக்கும் உறுதுணையாக இருந்திட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.