'கபாலி' உலகின் முதல் பிரீமியர் ஷோ மலேசியாவில் திரையிடப்பட்டது
சென்னை: ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே கபாலி படத்தின் ரசிகர்களுக்கான முதல் பிரீமியர் ஷோ மலேசியாவில் திரையிடப்பட்டது.
உலகம் முழுவதும் கபாலி ஜூரம் உச்சத்தைத் தொட்டுள்ளது. தமிழ் பேசும் மக்கள் இருக்கும் இடமெல்லாம் கபாலி குறித்த பேச்சுதான். இந்நிலையில், ரஜினியின் கபாலி படத்தின் முதல் பிரீமியர் ஷோ மலேசியாவில் தொடங்கிவிட்டது. இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு (அங்கு இரவு 9 ) ரசிகர்களுக்கான முதல் ஷோ மலேசியாவில் திரையிடப்பட்டது.
ரசிகர்கள் ஆரவாரத்துடன் திரையரங்கிற்கு வர, படம் தொடங்கி சில நிமிடம் ஆகியுள்ளது.
கபாலி படத்தை பார்க்க குடும்பம் குடும்பமாக கூட்டம் வந்துள்ளது, குறிப்பாக குழந்தைகள் பலர் கபாலி டி-ஷர்ட் அணிந்து அசத்திவிட்டார்களாம். சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் சும்மா தெறிக்க விட்றாங்க, விசில் சத்தம் விண்ணை முட்டுகின்றது. ரசிகர்களுக்கான முதல் ஷோ இது என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவை தொடர்ந்து சிங்கப்பூரிலும் ப்ரீமியர் காட்சி இன்னும் சில நொடிகளில் தொடங்கவுள்ளது, ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது. தமிழக சினிமா வரலாற்றில் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டு திரையரங்குகளில் கபாலி திரைப்படம் திரையிடப்பட உள்ளது.
அமெரிக்காவில் உள்ள 44 நகரங்களில் கபாலி படத்தின் ப்ரீமியர் ஷோ திரையிடப்படவுள்ளது. இதுவே தமிழ்படம் ஒன்று அங்கு இத்தனை நகரங்களில் திரையிடப்படுவது முதல்முறையாகும்.