ஜெயலலிதா மறைவுக்குப் பின் மாநில உரிமைகளை அதிமுக அரசு இழந்து வருகிறது - எம்.எல்.ஏ குற்றச்சாட்டு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், மாநில உரிமைகளை அதிமுக அரசு இழந்து வருகிறது என கடையநல்லூ எம்.எல்.ஏ குற்றம்சாட்டினார்.
நெல்லை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், மாநில சுயாட்சியை ஆளும் அதிமுக அரசு இழந்து வருகிறது என கடையநல்லூர் எம்எல்ஏ அபுபக்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
நெல்லை மாவட்டம் புளியங்குடியில் இந்திய யூனியன் முஸ்லீக் லீக் சார்பில் சமூக நல்லிணக்க கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட கடையநல்லூர் எம்எல்ஏ அபுபக்கர் பேசியதாவது: மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்கள் நலனில் அக்கறை செலுத்துவதில்லை. ஆனால், மாறாக சிறுபான்மையின மக்களுக்கு எதிரான அறிவிப்புகளை வெளியிட்டு அச்சுறுத்தி வருகிறது.

மேலும், கடந்த நவம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் மத்திய அரசு தோல்வி கண்டுள்ளது. தமிழ்நாட்டில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மாநில சுயாட்சியையும் மாநில உரிமைகளையும் ஆளும் அதிமுக அரசு இழந்து வருகிறது.
நீட் தேர்வில், மத்திய அரசு தமிழக அரசை பழி வாங்கி விட்டது. மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம். நீட் பிரச்சனைக்கு தீர்வு காணும் முன்னரே நவோதயா பள்ளி, இந்தி திணிப்பு என பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடுகிறது.
மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும் பாஜக திட்டத்திற்கு ஆளும் அதிமுக அரசு துணை போவதுடன், ஆட்சியை தக்க வைக்கும் எண்ணத்தில் சுயநலத்துடன் செயல்படுகிறது. மக்கள் டாஸ்மாக்குக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் சூழலிலும் தமிழகம் முழுவதும் 1000 டாஸ்மாக் கடைகளை திறக்க அதிமுக அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த அரசு பெண்களின் கண்ணீரை துடைக்கும் அரசாக இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications