ஜல்லிக்கட்டு நமது பாரம்பரியம்... தொடர வேண்டும்.. "விருமாண்டி" கமல்ஹாசன் ஆதரவு
சென்னை: ஜல்லிக்கட்டு என்பது காளைகளை துன்புறுத்துவது என்று இல்லை. அது ஏறு தழுவுதலாகும். வீர விளையாட்டு, தமிழகத்தின் பாரம்பரியம். அது தொடர வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டை வைத்து நிறைய அரசியல் செய்து விட்டார்கள். அதையும் தமிழர்கள் பார்த்து விட்டார்கள். பற்பல வழக்குகள், விசாரணைகளைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்காமலேயே போய் விட்டது.

இந்த நிலையில் வரும் ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பும், தடைகளை நீக்க மத்திய அரசு உதவ வேண்டும் என்ற குரல்களும் ஏற்கனவே ஒலித்து வருகின்றன.
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள லலித் கலா அகாடாமியில் வீர விளையாட்டு என்ற பெயரில் ஜல்லிக்கட்டு தொடர்பான புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதை இன்று கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். நவம்பர் 8ம் தேதி வரை இது நடைபெறும்.

நிகழ்ச்சிக்கு வந்த கமல்ஹாசனிடம் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த கமல்ஹாசன், ஸ்பெயினில் நடக்கும் காளைகள் கலந்து கொள்ளும் விளையாட்டில்தான் காளைகள் துன்புறுத்தப்படுகின்றன. தமிழகத்தில் அதுபோல நடப்பதில்லை.

இது நமது பாரம்பரியம், வீர விளையாட்டு. எனவே ஜல்லிக்கட்டு தொடர வேண்டும் என்று கூறினார் கமல்ஹாசன்.
கமல்ஹாசன் நடித்த விருமாண்டி படத்தில் காளையை அடக்கும் காட்சி வரும். அதில் மாடு பிடி வீரராக கமல்ஹாசனும் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications