விமர்சித்தால் கீழ்த்தரமாக பேசுகிறார்கள் தமிழக அமைச்சர்கள்.. கமல் ரசிகர் ஜனாதிபதிக்கு கடிதம்
தமிழக அரசை விமர்சனம் செய்தால் அமைச்சர்கள் கீழ்த்தரமாக பேசுகிறார்கள் என்று கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் பொறுப்பாளர் கமல்சுதாகர் குடியரசுத் தலைவருக்கு புகார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
சென்னை: தமிழக அரசியல் நிலை குறித்து விமர்சிப்பவர்களை கீழ்த்தரமாக நடத்தும் போக்கினை ஆளுங்கட்சி அமைச்சர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று மாவட்ட தலைமை கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் சிஎம்ஆர். கமல்சுதாகர், குடியரசு தலைவருக்கு புகார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
கமல்சுதாகர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசியல் விமர்சனங்களையும், விமர்சிப்பவர்களையும் கீழ்தரமாக நடத்தும் போக்கினை ஆளுங்கட்சி அமைச்சர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அரசு நிகழ்ச்சி ஒன்றில் ஊடகங்கள் கேட்ட கேள்விக்கு ஊழல் குறித்து கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு, ஒருமையில் தரம் தாழ்ந்த விமர்சனங்களை உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார். மேலும் சில அமைச்சர்கள் ஊடகத்தின் வாயிலாக மிரட்டும் தொனியில் பேசி வருகிறார்கள்.
வாக்களித்தத ஒரு சாதாரண குடிமகனின் கேள்விக்கு இத்தகைய எதிர் விமர்சனங்கள் வருவது முறையோ?
நீதிமன்றங்கள் தமிழக ஊழல் குறித்து சாடிய பொழுதெல்லாம் மௌனம் காத்த தமிழக அரசு, மக்களின் குரலாய் ஒலிக்கின்ற ஒரு குரலை குரல்வளையை நெறிக்கிறது.
குறை மற்றும் தவறுகளை திருத்திக் கொள்ள விமர்சனங்களும் கேள்விகளும், அவசியம், மக்கள் கருத்தை பிரதிபலித்தால் எதிரியாக பார்க்கும் தமிழக அரசும், அமைச்சர்களும் ஒரு சேர மக்கள் நலனுக்கு எதிரியாகவே செயல்படுகின்றனர். இத்தகைய கீழ்தனமாக போக்கு ஜனநாயகத்தின் விரோதமே, இதை வன்மையாக கண்டிக்குமாறு எங்கள் நற்பணி இயக்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications