மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர் சேர்க்கும் விதம் இது தான் போல: எச் ராஜா கிண்டல்
மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர் சேர்க்கும் விதத்தை எச் ராஜா கிண்டல் செய்துள்ளார்.
Recommended Video
சென்னை: மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர் சேர்க்கும் விதத்தை எச் ராஜா கிண்டல் செய்தும் அவருக்கு அனுப்பப்பட்ட இ-மெயிலையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
கமல்ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு தமிழக அரசு குறித்து கடுமையான விமர்சனம் செய்தார். அப்போதெல்லாம் கமலுக்கு தமிழக அரசு சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.
இருந்தபோதிலும் எச் ராஜா, தமிழிசை ஆகியோர் கமலை வறுத்தெடுத்ததை யாராலும் மறக்க முடியாது. எச் ராஜாவோ ஒரு படி மேலேபோய் கமலின் தனிப்பட்ட விவகாரங்களையெல்லாம் எடுத்து வீதியில் விட்டார்.
அரசியல் கட்சி
கடந்த மாதம் ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டில் அரசியல் பயணத்தை கமல் தொடங்கினார். அன்று மாலை மதுரை மேலூரில் அரசியல் கட்சி தொடங்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதன் கொடியையும் வெளியிட்டார்.
கொடி குறித்து விமர்சனம்
இந்நிலையில் கட்சியின் கொடி பாஜகவின் ஒரு அமைப்பில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என்று எச் ராஜா கூறியிருந்தார். ஆனால் அந்த கொடியே வேறு எங்கிருந்தோ எடுக்கப்பட்டது என்று நெட்டிசன்கள் ராஜாவை கலாய்த்தனர்.
கமலின் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை
இந்நிலையில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என ஆர்வமாக இணைந்து வருகின்றனர்.
தமிழிசைக்கு மெயில்
கமல் அனுப்பிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவம் தமிழிசைக்கு இமெயிலில் அனுப்பியதாகவும், அதில் அவர் இணைந்ததற்கு நன்றி என்று கமல் சார்பில் மெயில் அனுப்பப்பட்டதாக தமிழிசை நேற்று கூறியிருந்தார். மேலும் ஒருகட்சியின் மாநில தலைவராக உள்ள நான் எப்படி கமல் கட்சியில் சேர முடியும் என்றும் தமிழிசை வினவியிருந்தார்.
தமிழிசை மீது புகார்
தமிழிசைக்கு உறுப்பினர் எண்ணும் வழங்கப்பட்டு நீங்களும், நானும் நாம் ஆனோம் என்ற மெசேஜும் வந்துள்ளது. இந்நிலையில் தமிழிசை கேட்டதன் பேரிலேயே அவருக்கு விண்ணப்ப படிவம் மெயிலில் அனுப்பப்பட்டதாக மக்கள் நீதி மய்யம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
|
ராஜாவுக்கும் விண்ணப்பம்
இத்தனை குழப்பங்களுக்கு மத்தியில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜாவுக்கும் கமல் கட்சி சார்பில் இமெயில் மூலம் விண்ணப்பப் படிவம் அனுப்பப்பட்டது. அதிலும் எச் ராஜா உறுப்பினராகிவிட்டதற்கு நன்றி என்றும் உறுப்பினர் எண் வழங்கப்பட்டும் உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த எச் ராஜா தனக்கு வந்த இமெயில்களை டுவிட்டரில் வெளியிட்டு மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர் சேர்க்கும் விதம் இது தான் போல என்று நக்கல் அடித்துள்ளார்.