கமலின் புதுக் கட்சி.. பளிச்சென்று கண்ணில் பட்ட சமாச்சாரங்கள்!
Recommended Video
சென்னை: கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் எந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுக்கும் என்பதை காலம் தான் சொல்ல வேண்டும். மதுரையில் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்த கமலஹாசனின் முதல் நாள் நிகழ்வுகளும் அரசியல் பொதுக்கூட்ட மேடை நிகழ்வுகளும் விஸ்வரூபமாகவே இருந்ததன என்பதில் சந்தேகம் இல்லை.
நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினராக டெல்லியின் வரலாற்றைத் திருப்பிப் போட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழக விவாசாய தலைவர் பாண்டியன் என வித்தியாசமான கலவையாக இருந்தது. விவசாயிகளை ஈர்க்கும் விதமாகவே பாண்டியனுக்கு மேடையில் இடம் என்பது புரிகிறது. கூட்டத்தில் உரை ஆற்றிய கெஜ்ரிவால் டெல்லியை உதாரணம் காட்டி தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்றால் அதிமுக திமுக என்ற ஊழல் கட்சிகளை விடுத்து ஓட்டுப்போட வேண்டும். இனி தமிழகத்தில் நேர்மையான கட்சியாக, கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி இருக்கும் என்றார். அவரது பேச்சு உணர்வைத் தூண்டுவதாக இருந்தது. கட்சியின் அறிமுக கூட்டத்திலேயே கெஜ்ரிவால் கமலுக்கு ஓட்டுபோடுங்கள் என்று காரசாரமாக பிரசாரம் செய்யவும் ஆரம்பித்துவிட்டார். கமலும் நன்றியோடு, என் நேரமின்மையை, மக்களின் நேரமின்மையை புரிந்துகொண்டு தான் கெஜ்ரிவால் இப்படி கூறி இருக்கிறார் என்றார்.
அதிமுக, திமுக இரண்டு கட்சிக்கும் மாறி மாறி ஓட்டுப் போட்டு சலித்துப் போயிருக்கும் மக்களுக்கு, மாற்றம் ஏதாவது வராதா என்று காத்திருக்கும் மக்களுக்கு உள்ளுக்குள் இருக்கும் ஏக்கத்தை இன்னும் அதிகமாய் எழுப்பி விட்டிருக்கிறது கமல் கட்சி. அதேசமயம், மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் கமல் என்ற திரை கதாநாயகன் தானா அல்லது சகாயம் போன்ற நிஜ கதாநாயகர்களா என்ற விவாதம் இன்னொரு பக்கம்.
இதையும் தாண்டி
இதையெல்லாம் தாண்டி கமல் கூட்டத்தில் சில பளிச் விஷயங்கள் நமது கண்ணில் பட்டதை மறுக்க முடியாது. ரசியல் கூட்டங்கள் பொன்னாடை இல்லாமல் நடக்க முடியுமா ? முடியும் என்று காட்டி இருக்கிறது இந்த கூட்டம். பொன்னாடைகள் தவிர்க்கப்படும். அப்படியும் அணிவிக்க விரும்பினால் அந்த ஆடைகள் தகுதியான ஆதரவற்ற இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்குத் தான் ஆடையாக போய் சேர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டபோது பெருத்த கரவொலி எழுந்தது. இனி தமிழகத்தில் எது மாறுகிறதோ இல்லையோ இந்த ஒரு விஷயத்தையாவது பிற கட்சிகள் கமலின் புது கட்சியிடம் கற்றுக்கொள்ளலாம். கற்றுக்கொள்ள வேண்டும். (62வது வட்டம் சார்பாக அண்ணனுக்கு இந்த மலர் மாலையை மாணிக்க மாலையாக.. கேட்டு கேட்டு காது கடுத்துப் போச்சுங்க)
கட்சிப் பெயர் டிரெண்ட் மாற்றம்
வழக்கமான கட்சி பெயர்களில் திராவிடம் என்பதும் கழகம் என்பதும் தப்பாமல் ஒட்டிக்கொண்டிருக்கும். அதனால் தான் பாரதிய ஜனதா கட்சி கூட சமீப காலமாக கழகம் இல்லா தமிழ்நாடு என்று அடிக்கடி முழங்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த திராவிடம், கழகம் என்ற வார்த்தையை எல்லாம் ஒரு ஓரம் இருங்கள் என்று தள்ளி வைத்து விட்டு வெகு சாதாரணமாக மக்கள் நீதி மய்யம் என்ற பெயரை அறிமுகப்படுத்திய மனிதரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றுகிறாரோ இல்லையோ கமல் இந்த கட்சி பெயர் ட்ரெண்டை துணிச்சலாக மாற்றி இருக்கிறார்.
ஊகிப்பு வேறு உண்மை வேறு
கட்சி சின்னத்தில் கருப்பும் வெள்ளையாய் இணைந்த ஆறு கரங்கள் நடுவே நட்சத்திரம். கட்சியின் சின்னத்தை பார்த்த மாத்திரத்தில் இணைந்திருக்கும் கரங்கள் மக்கள் சேர்ந்தால் தான் முன்னேற்றம் என்று சொல்ல வருகிறார் என்று தோன்றியது. சிவப்பு வெள்ளை நிறங்கள் திராவிட கட்சி, அதிமுக கொடி வண்ணத்தை நினைவுபடுத்திகிறது. நட்சத்திரம் கூட கம்யூனிஸ்ட் கட்சியை லேசாக நினைவுபடுத்தியது. கை சின்னம் காங்கிரசை நினைவுக்கு கொண்டு வந்தது.இப்படியாக ஒவ்வொருவரும் ஒன்றை ஊகித்துக்கொண்டிருக்க ஆறு கரங்கள் என்பது 6 தென் மாநிலங்கள் நடுவில் நட்சத்திரமாய் இருப்பது மக்கள் என்று அவர் தெளிவாக விளக்கிவிட்டார்.
வாழும் நல்லவர்கள்
கேரளா மாநில முதல்வர் வாழ்த்து விடியோவாக ஒளிபரப்பட்டது. டெல்லி முதல்வர் விருந்தினராக வந்தது. அதன்பிறகு கமல் பேசுகிறபோது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொலைபேசியில் வாழ்த்தியதாக தெரிவித்தது, இது எல்லாம் ஒரு மிகப் பெரிய விளம்பரமோ அல்லது கமல் தான் சாதாரண ஆள் இல்ல தன்னுடைய பலம் அதிகம் தான் என்று காட்ட விரும்புவதாக தோன்றினாலும் வாழ்ந்து முடித்து விட்ட நல்லவர்களை பற்றி பேசி சிலாகிப்பதை விட்டுவிட்டு இப்போது நல்லதை செய்துகொண்டிருக்கும் மனிதர்களை பற்றி பேச வேண்டும் என்று சந்திரபாபு நாயுடுவை, அரவிந்த் கெஜ்ரிவாலைக் குறிப்பிடும் போது அதை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை .
கேள்வி பதில் சூப்பர்
மக்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக கமல் அளித்த கேள்வி பதில் பகுதி அருமையோ அருமை. மக்களின் கேள்விகளை ஏற்பதற்கு பெட்டிகள் ஏற்படுத்தி அதை தொகுத்து வழங்கிய முறை அருமை என்றால் அதற்கு கமல் வழங்கிய பதில்கள் என்னவோ வெகு அசத்தல் பதில்கள் தான் . இந்த மாதிரி மக்கள் கேள்வி பதில் அவரது எல்லா மேடையிலும் இருக்கும் என்று கூறி இருப்பது பாராட்டுக்குரியது. ஊழலை ஒழிக்க நான் மட்டுமல்ல நீங்களும் வர வேண்டும் என்றது, உங்கள் அளவில் ஊழல் இல்லையென்றால் உங்களை சுற்றியும் கொஞ்சம் கொஞ்சமாக ஊழல் குறையும் என்ற பேச்சில் விழிப்புணர்வு தொனித்தது. நல்ல கல்வி, மருத்துவம் , மின்சாரம் என்று வழக்கமானதும் பேசினார். சில கொள்கைகளை கூறிவிட்டு இப்போதைக்கு இது போதும் இதற்க்கு மேலும் நோண்டி நோண்டி கேட்பவர்களுக்கு புக் போட்டு தருவோம் வேலைகள் நடக்கிறது என்றபோது அவர் பேச்சு நச் என்று இருந்தது.
ஜெ. பாணியில்
இறுதியில் முக்கியமான விஷயத்தை விட்டுவிடாமல் எனக்கு எல்லாம் தந்த உங்களுக்கு என் ரசிகர்களுக்கு நான் ஒன்றும் இதுவரை செய்யவில்லை என்ற சென்டிமென்டும் இருந்தது. காகித பூ. மரபணு விதை என்று ஒவ்வொன்றிற்கும் பதில் சொல்லவா, செயலில் இறங்க வேண்டுமா என்ற அவரின் கேள்வியோடு முடிந்த கேள்வி பதில் அருமை. வெறும் அரசியல் நீள பேச்சாக நின்றுவிடாமல் கேள்வி பதில் அமைத்து பேசியது ஒரு புறம் என்றாலும் கூட மைக்கை பிடித்து எல்லாவற்றையும் வழக்கம்போல பேசிவிடாமல் இடை இடையே மக்களிடையே கலந்து கேள்விகள் அவர்களை நோக்கி எழுப்பி அவர்களை உற்சாகமாக இருக்க வைத்தது அருமை. கமல் மக்கள் பக்கம் கேள்விகள் கேட்கும் போது அதற்கு மக்களின் உற்சாக பதிலும் ஜெயலலிதா அம்மையார் அவர்களின் அரசியல் பிரசார செய்வீர்களா செய்வீர்களா என்ற ட்ரெண்ட் நினைவுக்கு வந்து போனது .
கோபம்
கமல் ஒரு நடிகர் என்ற போர்வையை கொஞ்சம் கழற்றி விட்டு பார்த்தால், இந்த மேடை பேச்சு எல்லாம் ஒரு அழகு தமிழனின் தீந்தமிழையும் தற்போது இருக்கும் அரசின் மேல் அவர் கொண்ட கோபத்தையும் தமிழகத்திற்கு எதையோ செய்ய துடிக்கும் முனைப்பையும் தான் காட்டுகிறது. கமல், ரஜினி, விஷால் போன்ற சினிமா நடிகர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் ஊடகங்கள் ஏனோ புதிதாக கட்சி ஆரம்பிக்கும் பலருக்கு அந்த வெளிச்சத்தை காட்டுவதில்லை என்பது உண்மையே. கமல், ரஜினி, விஷால் என்று கதாநாயகர்கள் எல்லாம் 2 மாதத்திற்கு ஒரு ஆளாக வரிசையாக அரசியல் களத்தில் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகம் வரிசையாக சினிமாக்கார்களுக்கு மட்டும் தானா என்று கேட்க தோன்றுகிறது. திரைத்துறையைத் தவிர்த்து ஒருவர் இப்படி நம் அடிமட்ட அடிபட்ட கூட்டத்தில் இருந்து எழுந்து நிமிர்ந்து நின்று மேடையில் பேசி இருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.
தமிழக மக்களின் மாற்றத்திற்கான தேடல் காணப்போகும் பதில் கமலா அல்லது ரஜினியா அல்லது இவர்கள் போல இனி அரசியலில் புதிதாக உதயமாகப்போகும் யாரவது ஒருவரா என்று காலமும் நம் எண்ணங்களும் நம் விரல் மையும் தான் பதில் சொல்லும்.
- Inkpena சஹாயா