பணத்துக்காக கமல் எதையும் செய்வார்- வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய வேண்டும்- அமைச்சர் சி.வி. சண்முகம்
விழுப்புரம்: பணத்துக்காக எதையும் செய்வார் கமல்ஹாசன்; அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய வேண்டும் என அமைச்சர் சிவி சண்முகம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கமல்ஹாஸன் தனியார் தொலைக்காட்சியில் 'பிக்பாஸ்' என்ற நிகழ்ச்சியை நடத்திவருகிறார். இந்த நிகழ்ச்சி குறித்து மக்கள் பலவிதமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இந்து மக்கள் கட்சி மூலம் எதிர்ப்புக் கிளம்பியது. அதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த கமல், 'தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது' என கூறினார்.
இதற்கு நிதியமைச்சர் ஜெயக்குமார், 'கமல் பொத்தாம்பொதுவாக சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது' என பதில் அளித்தார். இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், கமலை 'அவன்' என ஒருமையில் விளித்து விமர்சித்தார். இதனிடையே விழுப்புரத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கான பந்தக்கால் நடும் விழாவில் கலந்துகொண்டார் அமைச்சர் சிவி சண்முகம்.
அப்போது அவரிடம் கமல்ஹாஸன் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, 'கமல் பணத்துக்காக எதையும் செய்வார். ஒடுக்கப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசும் அவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்' என அதிரடியாகக் கூறினார்.












Click it and Unblock the Notifications