பயிர் சேதத்தை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்புங்கள்... ராஜ்நாத்துக்கு கனிமொழி கடிதம்
சென்னை: தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் சேதத்தை பார்வையிட மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என திமுக ராஜ்யசபா குழுத் தலைவர் கனிமொழி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
இந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் பெய்த பெருமழை தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பயிர்களைக் கடுமையாக பாதித்துள்ளது. இந்த மழையால் கடலூர், திருவாரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளில் மட்டும் ஆயிரக்கணக்கான சம்பா, மற்றும் தாளடிப் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டத்தில் மட்டும் 20,000 ஹெக்டேர் மரவள்ளிக் கிழங்குகள், 60,000 ஹெக்டேர் நெற் பயிர்கள் மற்றும் 1.2 லட்சம் ஹெக்டேர் நிலக்கடலை பயிர்கள் ஆகியவை சேதமடைந்துள்ளன. அது தவிர வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட குப்பைகள் இந்த நிலங்களை சாகுபடி செய்ய முடியாதவாறு கடுமையாக பாதித்துள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில், 840 -க்கும் மேற்பட்ட கிராமங்கள், 43,976 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதத்திற்குள்ளாகி இருகிறது. 600-க்கும் மேற்பட்ட கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒரு லட்சம் ஹெக்டேருக்கு மேற்பட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன.
எனவே, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் சமூக,பொறுப்புத் திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு உத்தரவிட வேண்டும். அதிகாரிகள் குழு ஒன்றை அமைத்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து வெள்ளத்தினால் ஏற்பட்ட பயிர் சேதத்தை முழுமையாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.