யார் முதல்வர் என்றே தெரியவில்லை.. கனிமொழி!
தூத்துக்குடி: தமிழகத்தில் தற்போது யார் முதல்வர் என்பதே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீவெங்கடேஷ்வராபுரம் கிராமமானது பேய்குளத்திற்கு அருகே அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. இந்நிலையில் கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட இந்த வெங்கடேஷ்வராபுரம் கிராமத்தை தத்தெடுக்கும் விழாவிற்காக கனிமொழி இன்று வருகை தந்தார்.
முன்னதாக தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, தமிழகத்தில் பால்விலை உயர்வு மற்றும் மின்கட்டண உயர்விற்கு மத்திய அரசு என்ன செய்ய இயலும். இந்த உயர்வினை மாநில அரசே உயர்த்தியுள்ளது. இதற்கான போராட்டங்கள் நடத்தியபோதும் தமிழகத்தில் அரசாங்கம் நடக்கிறதா? யார் முதல்வர் என்பதே தெரியாத நிலையில் உள்ளோம்.
பால்விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வந்தபோதும் இதற்கு என்ன விடை காணப்போகிறோம் என்பது தெரியாத நிலையில், மக்களுக்கு இது பெரிய கேள்விற்குறியாகவே இருந்து வருகிறது. தமிழகத்தில் அரசாங்கம் நடைபெறுவதாகவும் தெரியவில்லை என்றார் கனிமொழி.
தமிழக மீனவர் பிரச்சனை குறித்து கேட்டபோது தமிழக மீனவர்களை இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். பேட்டியின்போது முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் உடன் இருந்தார்.