Kanniyakumari.. இனிமே இப்படித்தான் எழுதனும், சரியா?
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தின் பெயரை ஆங்கிலத்தில் கூறுவதில் இதுவரை இருந்த குழப்பத்திற்கு அந்த மாவட்ட நிர்வாகம் முடிவு கட்டியுள்ளது. இனிமேல் ஆங்கிலத்தில் மாவட்டத்தின் பெயரை Kanniyakumari என்றுதான் எழுத வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Kanniyakumari என்று சிலரும், Kanyakumari என்று பலரும் எழுதி வந்ததால் கன்னியாகுமரி என்ற தமிழ்ப் பெயரை ஆங்கிலத்தில் எழுதுவதில் இதுகாலம் வரை பெரும் குழப்பம் நிலவி வந்தது.
இந்த நிலையில் இப்பெயர்க் குழப்பத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்று நுகர்வோர் உரிமைச் சங்கம் என்ற என்ஜிஓ அமைப்பு தீவிர முயற்சிகளில் இறங்கியது. கன்னியாகுமரியின் ஆங்கிலப் பெயரை Kanniyakumari என்றுதான் எழுத வேண்டும் என்று அது தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது. மனுக்கள் அனுப்பியும் வந்தது.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலும் கூட Kanniyakumari என்பதற்குப் பதில் Kanyakumari என்றே எழுதப்பட்டு வந்தது. ஆனால் ரயில்வேயில் Kanniyakumari என்ற பெயர் பயன்படுத்தப்பட்டு வந்தது.
தற்போது மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகையில் பழைய பெயர் மாற்றப்பட்டு Kanniyakumari என்ற பெயர் இடம் பெற்றுள்ளது. மேலும் இதே ஸ்பெல்லிங்கையே அனைத்து அலுவலகத்திலும் பயன்படுத்துமாறும் மாவடட் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாம்.