கரை சேராத மீனவர்கள், கலக்கத்தில் உறவுகள்... கை, வாயில் கருப்புத்துணி கட்டி மக்கள் போராட்டம்!
ஓகி புயலின் போது கடலுக்கு சென்று கரை திரும்பாத மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தின் 3 கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மார்த்தாண்டன்துறை : ஒகி புயலின் போது கடலுக்கு சென்று கரை திரும்பாத மீனவர்களை மீட்கக் கோரி இறவிபுத்தன்துறை, மார்த்தாண்டன்துறை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நவம்பர் 30ம் தேதி கன்னியாகுமரியை புரட்டிப் போட்டு விட்டு சென்ற ஓகி புயலானது மீனவ கிராம மக்களின் நிம்மதியையும் தூக்கி வாரிக்கொண்டு சென்றுவிட்டது. ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் பலரின் நிலை என்னவென்று தெரியாததால் அவர்களின் உறவினர்கள் அரசின் நடவடிக்கையை எதிர்பார்த்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீரோடி, மார்த்தாண்டன்துறை, இரவிப்புத்தன்துறை, சின்னத்துறை உள்ளிட்ட கிராம மக்கள் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்களின் குடும்பங்களுக்கு கேரள அரசு போல நிவாரணம் வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுட்டுள்ளனர்.
கருப்புத்துணி கட்டி போராட்டம்
நீரோடியில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் வரை ஊர்வலமாக நடந்து வந்த கிராம மக்கள், மார்த்தாண்டன்துறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கை மற்றும் வாயில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
என்ன ஆனார்கள் மீனவர்கள்?
காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க வேண்டும், அசம்பாவித காலங்களில் மீனவர்களை கண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுத்தி மீனவர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். சுமார் 57 நாட்களாகியும் கடலுக்குச் சென்ற 3 பேரை காணவில்லை என்றும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. தமிழக அரசு மீனவர்களை கண்டுபிடிக்க எந்த துரித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் உறவினர்களின் கோரிக்கை.
தேர்தலில் கவனம் செலுத்தும் அரசு
அண்டை மாநிலமான கேரளா மீனவர்களை மீட்பதில் காட்டும் அக்கறையில் சிறிதளவும் அரசு எடுக்கவில்லை என்பது மீனவர்களின் குற்றச்சாட்டு. மீனவர்களின் நிலை என்ன என்பதை தெளிவுபடுத்தாமல் ஆர்கே நகரில் தேர்தல் பிரச்சாரம் செய்வதிலேயே அரசு தீவிரமாக இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மீனவர்கள் கொந்தளிப்பு
பல மீனவர்கள் செத்து மிதப்பதாக தகவல்கள் வந்த நிலையிலும் அவர்களது உடல்களை மீட்கக் கூட அரசு முன்வரவில்லை என்பது மீனவ மக்களின் கொந்தளிப்புடன் கூடுகின்றனர். மீனவர்களின் நிலை என்ன என்பதற்கான முடிவு எட்டாத வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.