ஈரோடு அருகே கர்நாடக லாரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு !!
ஈரோடு: ஈரோடு அருகேயுள்ள அந்தியூரில் கர்நாடக பதிவெண் கொண்ட லாரி மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு காவிரியில் கடந்த 6-ந்தேதி முதல் தமிழகத்துக்கு தண்ணீரை திறந்து விட்டுள்ளது. இதற்கு அம் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மாண்டியா, மைசூர் மாவட்டங்களில் தொடர் போராட்டங்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. இதற்கிடையே தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள், பேருந்துகள், கார்கள் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்திலும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடக்கத் தொடங்கி உள்ளன.
இந்நிலையில்,ஈரோடு அருகேயுள்ள அந்தியூரிலிருந்து ராமாபுரம் நோக்கிச் கர்நாடக பதிவெண் கொண்ட லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் அந்த லாரியின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அந்த லாரி தீ பற்றி எரிந்தது. பின்னர் தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் ஈடுப்ட்டனர். அப்பகுதியிலுள்ள மக்களும் தீயை அணைக்க உதவி புரிந்தனர்.