கர்நாடகா பந்த் - தமிழக அரசு பேருந்துகள் ஓசூரோடு நிறுத்தம்!
கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் தமிழக அரசு பேருந்துகள், ஓசூர், பண்ணாரியில் நிறுத்தப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி: மகதாயி நதிநீர் பிரச்சினை, விவசாயிகள் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் தமிழகத்தில் இருந்து செல்லும் அரசு பேருந்துகள் எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ளன.
கர்நாடக மாநில விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. கர்நாடகத்தில் இன்று கன்னட அமைப்புகள் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்புகள் பங்கேற்கின்றன.
முழு அடைப்பு போராட்டத்தின் அடையாளமாக கர்நாடகாவில் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் கர்நாடகா செல்லும் தமிழக அரசு பேருந்துகள் எல்லைப் பகுதியான ஒசூரில் நிறுத்தப்பட்டுள்ளன.
திருப்பூர், ஈரோடில் இருந்து மைசூர் செல்லும் பேருந்துகள் பண்ணாரியில் நிறுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு காரணங்களுக்காக பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கர்நாடக மாநில அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு காவிரி போராட்டத்தின் போது, தமிழக அரசுப் பேருந்துகள் கர்நாடகாவில் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒசூரில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.