கர்நாடகாவைக் கண்டித்து புதுவையிலும் இன்று முழு அடைப்பு போராட்டம்!
புதுச்சேரி: தமிழர்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள கர்நாடகாவைக் கண்டித்து புதுவையிலும் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது.
புதுச்சேரியில் வணிகர்கள் கூட்டமைப்பு கூட்டம் நேற்று நடந்தது. இக் கூட்டத்தில் காவிரி நீர் பிரச்சினைக்காகவும், தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதே போல் பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள், சமூக அமைப்புகள் நடத்திய கூட்டத்திலும், முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் அழகிரி செய்தியாளர்களிடம் கூறுகையில், கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதலை கண்டித்து புதுச்சேரி அரசு உடனடியாக சட்டசபையைக் கூட்டி கர்நாடக அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். நீதிமன்றம், இந்திய அரசியலமைப்பு சட்டம் இவை எதையும் மதிக்காமல் செயல்படும் கர்நாடக காங்கிரஸ் அரசு மீது மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும். இந்த போராட்டத்துக்கு 31 அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளன.
தமிழர்கள் நலன் கருதி நடத்தப்படும் இந்த முழு அடைப்புக்கு வணிகர்கள், பஸ், ஆட்டோ, லாரி, திரையரங்கு, தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றார்.