என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை: கார்த்தி சிதம்பரம் பொளேர்
தம் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னை: என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் சந்திப்பேன் என்றும் அவர் கூறினார்.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடுகளில் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவர்களது வீடுகள் மட்டுமின்றி, சென்னை, காரைக்குடி, டெல்லி, நொய்டா உள்பட 14 இடங்களில் சிதம்பரம் குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்கள், அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. இதில் சென்னையில் மட்டும் 8 இடங்களில் ரெய்டு நடைபெற்றது.
கடந்த 2007-08ம் ஆண்டில் வெளிநாடு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மூலம், ஐஎன்எக்ஸ் மீடியா குழுமத்திற்கு ஒப்புதல் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான இந்த சோதனை நடைபெற்றதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. சோதனையின் முடிவில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று, கார்த்தி சிதம்பரம் நிருபர்களிடம் தெரிவித்தார்.
அதேநேரம், கார்த்தியை நுங்கம்பாக்கத்திலுள்ள அவரின் அலுவலகத்திற்கு சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்றது.
இந்நிலையில் இரவு 9 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரம் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், நான் எந்த தவறும் செய்யவில்லை. எனது வருமானம் குறித்து முறையாக வரி கட்டியுள்ளேன். மத்திய அரசு என்னை வேண்டுமென்றே பழிவாங்குகிறது. என் மீதான குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை, இந்த சவாலை சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications