திருவண்ணாமலையில் மகா தேரோட்டம்! ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி இன்றுகாலை மகா தேரோட்டம் நடைபெற்றது இதில் லட்சக்கணக்கான் பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகைதீப திருவிழா கடந்த 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது.
5 ஆவது நாள் இரவு விநாயகர் வெள்ளி மூஷிகத்திலும், முருகர் வெள்ளி மயில் வாகனத்திலும், அண்ணாமலையார் பெரிய ரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷபத்திலும் வதிஉலா வந்தனர்.
6 ஆவது நாளான நேற்று காலை விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலா நடந்தது. யானை வாகனத்தில் விநாயகரும், வெள்ளி யானையில் சந்திர சேகரரும் வீதிஉலாவந்தனர்.
முன்னதாக 63 நாயன்மார்கள் வீதிஉலா நடந்தது. பள்ளி மாணவர்கள் நாயன்மார்களை தோளில் சுமந்து மாடவீதியை சுற்றி வந்தனர். இதை காணமாடவீதிகள் முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து சாமி தரிசனம் செய்தனர்.
5 தேர்கள்
கார்த்திகை தீபவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. மொத்தம் 5 தேர்கள் மாட வீதிகளில் இன்று முழுவதும் பவனி வரும். காலை 5.40 மணிக்கு விநாயகர் தேர்பவனி வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. வழி நெடுகிலும் திரண்டு இருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். காலை 8.15 மணிக்கு விநாயகர் தேர் நிலையை அடைந்தது.
முருகன் தேர்
பின்னர் முருகன் தேரோட்டம் நடந்தது. இது நிலைக்கு வந்ததும் மகா தேரோட்டம் நடந்தது. இதில் அண்ணாமலையார் மாட வீதிகளில் பவனி வந்தார். மகா தேரை ஒரு பக்கம் பெண்களும், ஒரு பக்கம் ஆண்களும் வடம் பிடித்து இழுத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அம்மன் தேர்
இதையடுத்து அம்மன் தேரோட்டம் நடந்தது. இதை முழுக்க முழுக்க பெண்களே வடம் பிடித்து இழுத்து சென்றனர். இதை தொடர்ந்து சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடந்தது.
தேரோட்டத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர். இதனால் எங்கு பார்த்தாலும் பக்தர்களாக காட்சியளித்தனர். தேரோட்டத்தையொட்டி வேலூர் சரக டி.ஐ.ஜி. முருகன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இன்று இரவில் அனைத்து தேர்களும் ஆஸ்தான மண்டபத்தை அடைகிறது.