அதிமுக அரசு ‘அம்மா’ புகழ் பாடிக் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறது: கருணாநிதி
சென்னை: காவிரிக்கு குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகா தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் அதிமுக அரசு அம்மா புகழ் பாடிக் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறது எனக் கருத்துத் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் வடிவிலான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-
கேள்வி:- காவிரி ஆற்றில் மேகதாதுவில் அணைகள் கட்டுவது உறுதி என்று அந்த மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்திருக்கிறாரே?
கலைஞர்:- இந்தக் கேள்வியை நாம் கேட்டாலோ, நினைவுபடுத்தினாலோ, அவசர அவசரமாக பேரவையில் இன்றைக்கே முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஒரு அவசரத் தீர்மானம்கொண்டு வந்து காவிரி ஆற்றைத் தோற்றுவித்ததே எங்கள் "அம்மா"தான், அதற்காக ஒரு பாராட்டுத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று ஆரம்பித்து விடுவார்!
உடனே அவை முன்னவர் எழுந்து, "கருணாநிதிக்கு என்ன தெரியும்? ஐந்து முறை முதலமைச்சராக எப்படி இவர் இருந்தார்? இவருக்கு ஒன்றுமே தெரியாது, எல்லாம் எங்கள் "அம்மா"வுக்குத் தான் தெரியும்!" என்று ஆரம்பித்து விடுவார்.
அதற்குப் பதில் கூற கழக உறுப்பினர்கள் எழுந்தால், உடனே வெளியேற்றி விடுவார்கள். ஆனால் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா "காவிரி டெல்டா பகுதியில் உள்ள மேகதாதுவில் அணைகள் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக திட்ட வரைவு தயாரிக்க உலகளாவிய டெண்டர் விடப் பட்டுள்ளது" என்றெல்லாம் கூறி, ஏடுகளிலே அந்தச் செய்திவந்துள்ளது.
இதற்கிடையே, காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ள நிலையில், கட்டுமானப் பொருள்களைக் கொண்டு செல்வதற்கு ஏதுவாக, வனப் பகுதியிலிருந்து மேகதாதுவுக்குச் செல்ல சங்கமத்தில் இருந்து அர்த்தாவதி ஆற்றின் குறுக்கே புதிதாகப் பாலம் கட்டும் பணி மேற்கொள்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் ஏடுகளிலே செய்தி வந்துள்ளது. கர்நாடக அரசு மேலும் மேலும் அணை கட்டும் முயற்சியிலே ஈடுபட்டு செயலிலே தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது.
ஆனால் நம்முடைய அ.தி.மு.க. அரசு "அம்மா" புகழ் பாடிக் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.