Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூரண மதுவிலக்கு: ஆகஸ்ட் 10ல் மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்பாட்டம்: கருணாநிதி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி திமுக சார்பில் ஆகஸ்ட்10ம் தேதியன்று மாவட்டத் தலைநகரங்களில், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர் தலைமையில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரி அறவழியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 4ம் தேதி மதிமுக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் முழுஅடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் திமுக சார்பில் தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளார் கருணாநிதி.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று 21-7-2015 அன்று நான் அறிவித்திருந்த போதிலும், தமிழகமெங்கும் உடனடியாக மதுவிலக்கை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்று அ.தி.மு.க. அரசை வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்களின் தொடர்ச்சியாக, தமிழக மக்களின் ஒருமித்த உணர்வுகளை பிரதிபலித்திடும் வகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 10-8-2015 திங்கள்கிழமையன்று மாவட்டத் தலைநகரங்களில், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர் தலைமையில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரி அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

போராட்டம் தீவிரம்

போராட்டம் தீவிரம்

இது போல் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், டாஸ்மாக் கடையை மூட வேண்டுமென்ற கோரிக்கைக்காகவே காந்தியவாதி சசிபெருமாள் தனது உயிரையே கொடுத்திருக்கிறார். அவருடைய குடும்பத்தினரே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை, அவரது உடலை வாங்க மாட்டோம் என்று கூறிவருகிறார்கள். குறிப்பாக சசிபெருமாள் அவர்களுடைய மகன் விவேக், மகள் கவியரசி உட்பட 28 பேர் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள். காவல் துறையினரோ அவர்களோடு இணக்கமாகப் பேசிச் சமாதானம் செய்ய முயற்சிக்காமல், அந்த 28 பேரையும் கைது செய்து நிலைமையை மோசமாக்கி இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

கண்மூடித்தனமாக கைது

கண்மூடித்தனமாக கைது

சசிபெருமாளின் மகள் கவியரசி பள்ளிச் செல்லும் சிறுமி. அந்தச் சிறுமியை கூட இரக்கமின்றிக் கைது செய்கின்ற அளவுக்கு அ.தி.மு.க. அரசு சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து சசிபெருமாள் அவர்களின் மனைவி மகிழம், மகன் நவநீதன் ஆகியோரும் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள். அவர்களையும் அ.தி.மு.க. ஆட்சியினர் கண் மூடித் தனமாகக் கைது செய்திருக்கிறார்கள்.

தடியடி நடத்தி தாக்குவதா?

தடியடி நடத்தி தாக்குவதா?

கைது செய்யப்பட்ட சசி பெருமாள் அவர்களின் மகனே கழகப் பொருளாளர், ஸ்டாலினை தொலைபேசியிலே தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை விவரித்திருக்கிறார். வாலிபர் மற்றும் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சசிபெருமாள் குடும்பத்தினரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கும் காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அந்த இளைஞர்களையும் காவல் துறையினர் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள்.

வைகோ மீது தாக்குதல்

வைகோ மீது தாக்குதல்

இதுபோலவே நெல்லை மாவட்டம், கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி ம.தி.மு.க. சார்பில் அந்தக் கட்சியின் தலைவர் வைகோ தலைமையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் காவல் துறையினர் தடியடி நடத்திக் காயப்படுத்தியதோடு, பத்து ரவுண்டுகள் கண்ணீர்ப் புகை குண்டு வீச்சும் நடத்தியுள்ளனர். போராட்டம் நடத்தியவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு என்றெல்லாம் பதிவு செய்திருக்கிறார்கள்.

மதுக்கடைகளை மூடவில்லை

மதுக்கடைகளை மூடவில்லை

அந்த ஊரில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டுமென்று, ஊராட்சி மன்றத்திலே தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும் கூட, இந்த ஆட்சியினர் அந்தக் கடையை மூடுவதற்கு முன் வரவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள். காஞ்சிபுரத்திலும், ஆற்காட்டிலும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென்று கோரிப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

அரசின் நடவடிக்கை என்ன?

அரசின் நடவடிக்கை என்ன?

இவ்வாறு தமிழகமெங்கணும் மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால் இது பற்றி அரசின் சார்பில் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்றால் இல்லை என்பது தான் வேதனை. போராட்டம் நடைபெறும் எந்த இடத்திலாவது அமைச்சர்களில் யாராவது ஒருவர் சென்று அமைதி ஏற்படுத்த முயன்றிருக்கிறாரா என்றால் அதுவும் கிடையாது.

நிபந்தனையின்றி விடுதலை செய்க

நிபந்தனையின்றி விடுதலை செய்க

உண்மையில் சொல்லப் போனால், தமிழகத்திலே ஆட்சி என்று ஒன்று நடைபெறுகிறதா என்பதே கேள்விக்குள்ளாகிவிட்டது. எனவே தமிழகத்திலே பூரண மதுவிலக்கை நடைமுறைப் படுத்த வேண்டுமென்ற கோரிக்கைக்காக நடைபெறும் போராட்டத்தை, சமூகப் பிரச்சினையாகக் கருதி அரசே நேரடியாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு அரசியல் தீர்வு காண முயற்சிக்காமல், போராட்டம் நடத்துபவர்கள் மீது காவல் துறையின் துணையோடு கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதை வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்தப் போராட்டங்களில் கைது செய்யப்பட்டவர்களையெல்லாம் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+