சட்டம் ஒழுங்கின் லட்சணத்தை மதுரை கல்லூரி மாணவிகள் மீதான அமில வீச்சு காட்டுகிறது.. கருணாநிதி
சென்னை: தமிழகத்தில் எந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு உள்ளது என்பதை மதுரை திருமங்கலத்தில் கல்லூரி மாணவிகள் மீதான திராவக வீச்சு காட்டுகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில்:
12-9-2014 அன்று மதியம் சுமார் 2 மணிக்கு, பட்டப்பகலில், மாணவிகள் இருவர் கல்லூரியைவிட்டு வெளியே வந்து சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் எதிரே வந்து, மாணவிகள் மீது திராவகத்தை வீசியிருக்கிறார்கள். தாக்குதலில் நிலை குலைந்த மாணவிகள் வேதனையால் சாலையிலே விழுந்து புரண்டிருக்கிறார்கள். திராவகத்தை வீசிய இருவரும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்று விட்டார்கள். மாணவிகள் இருவரும் முகம், கை, கால்கள் கருகிய நிலையில் மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த திராவகம் வீசுகின்ற கலாச்சாரம் இன்று நேற்றல்ல; பல ஆண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது சந்திரலேகா என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மீதே திராவகம் வீசப்பட்டு, அந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்றது. யாரால் எதற்காக அது நடைபெற்றது என்பதெல்லாம் அப்போதே தமிழகம் நன்கறிந்தது தானே?
மதுரையிலே திராவகம் வீசப்பட்டது பற்றி 13-9-2014 தேதிய நாளிதழ் ஒன்றில், மிகப் பெரிய தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 15 மாதங்களில் மட்டும் தமிழ்நாட்டில் 200 திராவக வீச்சு சம்பவங்கள் நடைபெற்றிருப்பதாகவும், அதில் பாதிக்கப்பட்டவர்களில் 76 பேர் 21 முதல் 30 வயதானவர்கள் என்றும், 70.2 சதவிகிதத்தினர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு ஆளான மீனா என்ற பெண்ணின் தந்தை இறந்து 22 நாட்கள்தான் ஆகிறதாம். அவளுடைய தாய் முருகேஸ்வரி அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பவர். அமைதியான பெண் என்றும், யாரும் எதிரிகள் கிடையாது என்றும், திருமணம் குறித்து எந்தவிதமான தகராறுக்குரிய பிரச்சினைகள் இல்லை என்றும் அந்தத் தாய் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு எந்த அளவுக்கு சீர் கெட்டிருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவமே தக்க உதாரணமாகும் என்று திருமதி உ.வாசுகி தெரிவித்திருப்பதாகவும் அந்தச் செய்தியில் தெரிவித்துள்ளது என்று கருணாநிதி கூறியுள்ளார்.