கலவரத்தைத் தூண்டியதாக வழக்கு.. ஸ்டாலினுடன் கருணாநிதி அவசர ஆலோசனை
சென்னை: அதிமுகவினருக்கு எதிராக கலவரத்தைத் தூண்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சென்னை ராயப்பேட்டை போலீஸார் வழக்குப் போட்டுள்ளதைத் தொடர்ந்து வழக்கறிஞர் சண்முக சுந்தரம் மற்றும் திமுக முன்னணியினருடன் திமுக தலைவர் கருணாநிதி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது அ.தி.மு.க.வினர் புகார் கொடுத்ததின் பேரில் ராயப்பேட்டை போலீசார் கொலை மிரட்டல், கலவரத்தைத் தூண்டியது உள்பட 3 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இவர்கள் தவிர 500 திமுகவினர் மீதும் வழக்குப் போடப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று காலை கோபாலபுரம் வீட்டுக்கு ஸ்டாலின் வந்தார். அதேபோல முன்னாள் அமைச்சர் துரைமுருகன், ஜெ அன்பழகன், ஏ.ராசா, வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆகியோரும் வந்தனர்.
அவர்கள் புதிய வழக்கு குறித்து கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை குறித்த விவரம் தெரியவில்லை.