முழுமையாக மீண்டு வருகிறார்- ஈரோடு தமிழன்பனுக்கு புத்தகத்தில் ”முக” என கையெழுத்திட்டு தந்த கருணாநிதி
கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு நூல் ஒன்றில் முக என கையெழுத்திடும் அளவுக்கு கருணாநிதி உடல்நலம் தேறியுள்ளது.
Recommended Video

சென்னை: முதுமையால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி தற்போது முழுமையாக குணமடைந்து மீண்டு வருகிறார். அண்மையில் தம்மை சந்தித்த கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு அவர் தந்த புத்தகத்தின் முதல் பக்கத்தில் முக என கையெழுத்திட்டு கருணாநிதி கொடுத்தனுப்பியது திமுக தொண்டர்களையும் அவரது ஆதரவாளர்களையும் பெரும் மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது.
உடல்நலம் தேறிவரும் கருணாநிதியை அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். அண்மையில் இடதுசாரித் தலைவர்கள் நல்லகண்ணு, முத்தரசன் உள்ளிட்டோர் கருணாநிதியைச் சந்தித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போதைய உடல்நிலையிலும் தெளிவாக முக என கருணாநிதி கையெழுத்திட்டு கொடுத்திருக்க செய்தி திமுக தொண்டர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளரும் கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

தமிழன்பனுடன் சந்திப்பு
மாகவிஞர் ஈரோடு தமிழன்பன், அண்மையில் கலைஞரை சந்திக்கச் சென்றார். கவிஞரைப் பார்த்ததுமே கலைஞர் தன் கையைஉயர்த்தி அவரை வரவேற்றார்.

முக என கையெழுத்து
கவிஞர்களின் காதலரான கலைஞரின் முகத்தில் வெளிச்சம் கூடியது. அவர் அருகே சென்று நலம் விசாரித்த கவிஞர், தான் எழுதிய ‘மாற்று மனிதம்' நூலை கலைஞரிடம் கொடுக்க, கலைஞரோ அதன் முதல் பக்கத்தைத் திறக்கசெய்து, தன் எழுதுகோலால் மு.க. என சுருக்கெழுத்தில் கையெழுத்திட்டார்.

தெளிவாக கையெழுத்து
நின்ற நிலையில் நீட்டப்பட்ட நூலிலேயே, கலைஞரால் இவ்வளவு தெளிவாகக் கையெழுத்து போட முடிகிறது என்றால், கலைஞரின் விரல்களை விட்டு, தமிழ் நழுவிவிடவில்லை என்று பொருள்.

வதந்திகள் உடைப்பு
இதனால் கொண்டுபோன நூலைக் கலைஞரிடம் கொடுக்காமலே, நினைவுப் பெட்டகமாய்த் திருப்பி எடுத்துவந்துவிட்டார் கவிஞர் ஈரோட்டார். கலைஞரின் நினைவாற்றல் முழுதும் போய்விட்டது. அவரால் அசையக் கூட முடியவில்லை என்றெல்லாம் பரப்பட்டு வரும் தகவல்களை உடைத்தெறிகிறது கலைஞரின் இந்தக் கையெழுத்து.
இவ்வாறு ஆரூர் தமிழ்நாடன் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications