கருணாநிதி பாஜகவை பார்த்து பயப்படுகிறார்: தமிழிசை சவுந்திரராஜன்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி எங்களை பார்த்து பயப்படுகிறார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
திருவள்ளுவர் மற்றும் பாரதியார் ஆகியோரின் புகழை நாடு முழுவதும் பரப்பு பாஜக முயற்சித்து வருகிறது. பாஜக எம்.பி. தருண் விஜய் குமரியில் திருவள்ளுவர் திருப்பயண பிரச்சாரத்தை இன்று துவங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கலந்து கொள்கிறார்.
தமிழுக்கும், தமிழர்களுக்காவும் பாடுபடும் பாஜகவை பார்த்து மதத்தால் பிரித்தாளுகிறது என்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. பாஜகவை மொழி வெறி பிடித்தது என்று கூறும் அவரின் பேச்சை கண்டிக்கிறேன்.
பாஜக தமிழகத்தில் காலூன்றிவிடும் என்ற பயத்தில் தான் அவர் அப்படி பேசுகிறார். நாங்கள் மதத்தால் அல்ல வளர்ச்சி திட்டங்களால் தமிழகத்தில் காலூன்றிக் கொண்டிருக்கிறோம். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றுக் கட்சியாக பாஜகவை தமிழக மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டனர். கருணாநிதி எங்களை பார்த்து பயந்தபோதே எங்களின் வளர்ச்சி மேலும் அதிகரித்துவிட்டது. தமிழக அரசியல் சூழல் பற்றி அவருக்கு நன்கு தெரியும்.
திமுக கூட்டணியில் சேரத் தயார் என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார். எத்தனை பேர் சேர்ந்தாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது. நாங்கள் பாஜகவை பலப்படுத்திக் கொண்டிருக்கிறோம். மோடியின் திட்டங்களை எடுத்துக் கூறி வருகிறோம்.
இலங்கை பிரச்சனை மட்டும் தீர்ந்துவிட்டால் தமிழகத்தில் கட்சி நடத்தும் சிலரால் அரசியல் நடத்த முடியாது. நாங்கள் இலங்கை பிரச்சனையை முற்றிலும் தீர்க்க முயற்சித்து வருகிறோம். வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.