திருவள்ளுவரே தமிழ்நாட்டில் திணறிப்போயிருக்கிறார் அதிமுக ஆட்சியில்... கலைஞர்
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கான பதில் உரையில் ஜெயலலிதா தெரிவித்திருந்த கருத்துகளை முன்வைத்து " பதில் உரையா?பழி உரையா" என்ற தலைப்பில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
சட்டசபையில் ஆளும் கட்சியினரின் கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்தால் அதனை அரசின் மீது சுமத்தப்படும் குற்றமாகவே கூறுவது முறையற்றது. ஜனநாயக நாட்டில் கருத்துகளை சுதந்திரமாக தெரிவிக்க கூட உரிமையில்லாமல் போய்விட்டது.
ஆட்சியாளர்களைப் பற்றிய கருத்துகளை மற்றவர்கள் தெரிவிக்கும் போது அதில் உள்ள நிறைகுறைகளை பகுத்து அறிந்து பார்த்தால்தான் அது ஒரு நல்ல ஆட்சியாக அமைய முடியும். திருவள்ளுவரை உதாரணம் காட்டி முதல்வர் பேசியிருக்கிறாரே, அவருடைய ஆட்சியில்தான் திருவள்ளுவர் கோட்டம் சரியாக பராமரிப்பின்றி இருக்கிறது.
திருவள்ளுவர் பெயரிலான நூலகங்களும் மூடப்பட்டன. இதனையும் அவர் மனதில் கொள்ள வேண்டும். தமிழக ஆட்சியில் இலவசங்களை கொடுத்து ஏமாற்றுவதில்லை என்று கூறிய ஜெயலலிதாவே தற்போது இலவசங்களை வழங்கிக்கொண்டிருக்கிறார்.
இவருடைய ஆட்சியில் வேளாண்மை முதல் விண்வெளி வரை எல்லா துறைகளும் பெரும் அளவில் வீழ்ச்சியைதான் சந்தித்துள்ளன.
இவ்வாறு கருணாநிதி தமது அறிக்கையில் கூறியுள்ளார்.