94 வயதில் வைகோவின் தாயார் மது விலக்குக்காக போராடுகிறார்.. அமல்படுத்துங்கள் உடனே.. கருணாநிதி
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் தாயாரான 99 வயது மாரியம்மாள் தலைமையில் மது விலக்குப் போராட்டம் தொடங்கியுள்ளது. எனவே அதிமுக அரசு உடனடியாக மது விலக்கினை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம், அவசரம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் தாயார், 94 வயதான மாரியம்மாள் தலைமையில் போராட்டம் தொடங்கியுள்ளது. சசிபெருமாளின் சொந்த ஊரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகின்றது. இந்த நிலையில் அ.தி.மு.க. அரசு உடனடியாக மதுவிலக்கினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசர அவசியமான ஒன்றாகும்.
பா.ஜ.க. வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் உடனடியாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டுமென்று கூறியிருக்கிறார். நெல்லை மாவட்டத்தில், ஆலங்குளத்தில் இசக்கிமுத்து என்ற ஆட்டோ டிரைவரை டாஸ்மாக் பாரிலேயே காவலர் ஒருவர் நேற்று பாட்டிலால் குத்திக் கொலை செய்திருக்கிறார் என்ற செய்தியும் வந்துள்ளது. அதே நெல்லையில் கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, வைகோவின் தாயார், 99 வயதான மாரியம்மாள் தலைமையில் போராட்டம் தொடங்கியுள்ளது.
சசிபெருமாளின் சொந்த ஊரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகின்றது. இந்த நிலையில் அ.தி.மு.க. அரசு உடனடியாக மதுவிலக்கினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசர அவசியமான ஒன்றாகும்.
தி.மு. கழகம் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் மதுவிலக்கினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளும் என்று நான் அறிவித்திருந்த போதிலும், தற்போது தமிழகத்தில் எழுந்துள்ள நிலைமை மாற்று யோசனை எதற்கும் இடம் கொடுக்காமல் உடனடியாகவே மதுவிலக்கினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதற்கு பேராதரவாகவே உள்ளது. எனவே சசிபெருமாள் போன்று மேலும் பலரது உயிர்களைக் காவு கொடுக்காமல் காப்பாற்ற அ.தி.மு.க. அரசு இனியும் தாமதிக்காமல், மதுவிலக்கினை உடனடியாக தமிழகத்தில் கொண்டு வருவதற்கான அறிவிப்பினைச் செய்ய வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன் என்று கருணாநிதி கோரியுள்ளார்.