சிறுவாணி அணை... மத்திய அரசு கடிதம் அனுப்பியும் பதில் தராத தமிழக அரசு
ஆனால் இன்றைய செய்தி என்ன? அதையும் "இந்து" நாளேடு எழுதியுள்ளது. சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளாவில் அணை கட்டுவது பற்றி மத்திய அரசின் செயலாளர் 4-5-2016 அன்று தமிழக அரசின் பொதுப்பணித் துறைச் செயலாளருக்குக் கடிதம் ஒன்று எழுதியிருக்கிறார். No Reply was received from the State of Tamil Nadu till August 11 and 12 when the EAC meeting was held. அதாவது இதற்கான வல்லுநர் குழுவின் கூட்டம் நடைபெற்ற 2016 ஆகஸ்ட் 11 மற்றும் 12ஆம் தேதிவரை, தமிழக அரசாங்கத்திடமிருந்து எந்தப் பதில் கடிதமும் வரவில்லை. மத்திய அரசு மற்றும் கேரள அரசிடமிருந்து அனுப்பப்பட்ட பல கடிதங்களுக்கு, தமிழக அரசிடமிருந்து எந்தப் பதிலும் இல்லாத காரணத்தால், இதற்கான குழு இந்தத் திட்டத்திற்காகப் பரிந்துரை செய்திருக்கிறது என்று "இந்து" நாளிதழ் எழுதியிருக்கிறது.
அதே செய்தியில், 1970ஆம் ஆண்டு வாக்கிலேயே இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த யோசிக்கப்பட்டதாகவும், ஆனால் தமிழக அரசின் எதிர்ப்பு காரணமாக திட்டம் கைவிடப்பட்டதாகவும் எழுதப்பட்டுள்ளது. (In fact, the Project was conceived in the 1970s and was dropped following opposition from the Tamil Nadu Government)
மத்திய அரசும், கேரள அரசும் எழுதிய பல கடிதங்களுக்கு எந்தவிதமான பதிலும் தமிழக அரசின் சார்பில் இப்போது அனுப்பப்படவில்லை என்று தமிழக அரசின் மீது குறை கூறி, அதனையே அடிப்படையாக வைத்து, சிறுவாணியின் குறுக்கே அணை கட்டுவதற்கான பரிந்துரையை குழு செய்ய நேரிட்டது என்று சாட்டப்பட்டுள்ள கடும் குற்றச்சாட்டிற்கு தமிழக அரசு விளக்கம் அளித்திருக்க வேண்டாமா? கேள்வி கேட்கும் எதிர்க் கட்சிகளை, கேள்விகளையும் பதிவு செய்யாமல், பதிலுமளிக்காமல் அவையை விட்டு நாள் கணக்கிலே வெளியேற்றும் அ.தி.மு.க. அரசு; எதையும் கேட்டு விடுவார்களோ என்று அஞ்சி எதிர்க் கட்சிகளை முன் கூட்டியே இடை நீக்கம் செய்து விட்டு காவல் துறை மானியக் கோரிக்கையை, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நிறைவேற்றிக் கொண்ட அதிமுக அரசு; சிறுவாணியின் குறுக்கே அணை சம்பந்தமாகத் தற்போது தமிழக அரசின் மீது சாட்டப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் அளிக்கப் போகிறது?
இதுபோலவே தான் அண்மையில் தடப்பள்ளி, அரக்கன் கோட்டை பாசன விவசாயிகளுக்காக ஆகஸ்ட் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால் கீழ்பவானி பாசனத்தில் உயர் நீதி மன்ற உத்தரவை தமிழக அரசு மீறுகிறது என்றும், நடுவர் மன்றத் தீர்ப்பை மதிப்பதில்லை என்றும் கூறி அந்தப் பகுதி விவசாயிகள் வீதிக்கு வந்து போராடத் தொடங்கியிருக்கிறார்கள். இதுபற்றி விவசாயச் சங்கத் தலைவர்கள் பொன்னையன், நல்லசாமி ஆகியோர் தமிழக அரசின் மீது சாட்டியிருக்கும் குற்றச் சாட்டுகளுக்கு தமிழக அரசு என்ன விளக்கம் அளிக்கப்போகிறது?