பாகுபலி ஒரு தரைரேட் விட்டலாச்சாரியா படம்.. அத்தனையும் காப்பி: சீறும் பிரபல எழுத்தாளர்
சென்னை: கருந்தேள் என்ற அடைமொழியால் பிரபலமான ராஜேஷ், திரைக்கதை எழுதலாம் வாங்க என்ற புத்தகத்தின் ஆசிரியர். திரைக்கதை தொடர்பாக பல நாளிதழ்களில் தொடர்கள் எழுதி பிரபலமானவர். நாடே பாகுபலியை கொண்டாடும் இந்த நேரத்தில், பாகுபலி மீது சரமாரி விமர்சனங்களை முன்வைத்து தனது வெப்சைட்டில் எழுதியுள்ளார் கருந்தேள் ராஜேஷ்.
இது ஒரு சராசரி தெலுங்கு மசாலா படம் என்பதில் ஆரம்பித்து, பல்வேறு ஹாலிவுட் படங்களில் காப்பி என்றும், விளம்பரத்தால் ஓடும் படம் என்றும் போட்டு தாக்கியுள்ளார். அவரது பதிவின் முக்கிய அம்சங்களை பாருங்கள்.
இந்தியாவின் மிக அதிக பட்ஜெட்டில் உருவான படம்', ‘ஹாலிவுட்டுக்கு சவால் விடும் ஸிஜி', ‘கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கும் மேலான உழைப்பில் எடுக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான படம்' என்றெல்லாம் பல விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு, ஊரெல்லாம் ‘பாஹுபலி பாஹுபலி' என்ற ஹைப் உருவாக்கப்பட்டு வெளிவந்திருக்கும் படம்.

மயங்க கூடாது
ஒரு படம் இப்படி நாடு முழுதும் வெறித்தனமாக மார்க்கெட்டிங் செய்யப்படும்போது, கிட்டத்தட்ட எல்லாத் திரைப்பட ரசிகர்களின் பின்னங்கழுத்தையும் பிடித்துத்தள்ளி, இப்படத்தைப் பார்க்கச் செய்யும் அளவு விளம்பரங்கள் ஒவ்வொரு மணி நேரமும் வந்துகொண்டே இருக்கும்போது, ஒரு திரைப்பட ரசிகனாக நமது வேலை, அவற்றுக்கெல்லாம் மயங்கி, கண்மூடித்தனமாக இதுபோன்ற படங்களைப் பார்ப்பது அல்ல.

திருப்தி உள்ளதா
ஒரு திரைப்படம் என்ற வகையில், கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு, இசை உட்பட்ட எல்லா அம்சங்களிலும் இப்படம் நம்மைத் திருப்தி செய்கிறதா என்பதைப் பிற படங்களைப் பார்த்து முடிவுசெய்வதுபோலவே இப்படத்தையும் பார்ப்பதுதான் நம் வேலையாக இருக்கவேண்டும்.

தரைரேட் விட்டலாச்சாரியா படம்
பாஹுபலியின் முதல் காட்சியே, இப்படம் எப்படி இருக்கப்போகிறது என்பதைத் தெரியப்படுத்திவிட்டது. ரசனையில் நமக்கும் ஆந்திராவுக்கும் சிறுசிறு வித்தியாசங்கள் உள்ளன அல்லவா? ஹீரோவைக் கடவுள் ரேஞ்சில் வைத்து வழிபடுவது போன்ற சில ஒற்றுமைகள் இருந்தாலும், தரைரேட் விட்டலாச்சார்யா படம் ஒன்றை நம்மால் இன்றைய காலகட்டத்தில் முழுதுமாக ரசித்தல் இயலாத காரியம். காரணம், தமிழ்ப்படங்கள் இதுபோன்ற மொக்கைகளில் இருந்து விடுபட்டு, தரமான படங்களை ஏற்கெனவே கொடுத்துக்கொண்டிருக்கின்றன.

திணிப்பு
இந்த நிலையில், ஒரு விட்டலாச்சார்யா படத்தின் தரத்தில் ஒரு படத்தை எடுத்து, ‘இதுதான் இந்தியாவின் பிரம்மாண்டம்' என்று அனைவரின் மீதும் திணித்தால் அதை எப்படி ஒப்புக்கொள்ளமுடியும்? தண்ணீருக்குள்ளேயே தன்னிஷ்டத்துக்கு நடக்கிறாள் ஒரு அம்மணி. அவள் உயர்த்தப்பட்ட கையில் ஒரு குழந்தை. பின்னணியில் இருக்கும் மிகப்பெரிய அருவியோ, ஸிஜி என்று அப்பட்டமாகத் தெரிகிறது. இப்படியாக, துளிக்கூட ஒன்ற முடியாத ஒரு காட்சியோடுதான் பாஹுபலி துவங்குகிறது. இந்தக் காட்சியைப் பார்த்தாலே, படத்தில் பின்னால் என்னவெல்லாம் வரப்போகிறது, படத்தின் மேக்கிங் எப்படி இருக்கப்போகிறது என்பதெல்லாம் தெளிவாகவே புரிந்துவிடும்.

நிலப்பரப்பை கற்பனை செய்வது
படத்தின் கதை நடக்கும் நிலப்பரப்பு எத்தகையது? அந்த நிலப்பரப்பை எப்படிக் கற்பனை செய்துகொள்வது? மிகப்பெரிய அருவி. மேலே ஒரு நாடு. கீழே சில காட்டு மக்கள். அங்கே லோக்கல் ஹல்க்காக வளர்கிறார் ஹீரோ. இதுதான் நிலப்பரப்பின் பின்னணி. அந்த நிலத்தில் திடீரென்று பனி பெய்கிறது. இந்தப் பனிக்கு சம்மந்தமே இல்லாமல் வசந்தம். இறுதிக்காட்சியின் போர்க்களம் நிகழும் இடமே அதுவரை வரவில்லை. இப்படி, தானும் குழம்பி, நம்மையும் குழப்பியுள்ளனர்.

ஹாலிவுட் பட காப்பி
அந்த மிகப்பெரிய அருவியின் உச்சியில் என்ன இருக்கிறது என்று பார்க்க முடிவுசெய்கிறார் ஹீரோ. Dark Knight Rises படத்தில் இந்தியாவில் ஒரு பாதாள சிறைக்குள் சிக்கிக்கொண்ட ப்ரூஸ் வேய்ன், கீழிருந்து மேலே வரப் போராடுவார் இல்லையா? அதுதான் இந்தப் படத்திலும் அப்படியே கட் காப்பி பேஸ்ட் செய்யப்பட்டிருக்கிறது. அதிலாவது கிணறு. இதிலோ பிரம்மாண்ட அருவி. ஆனால் அதில் ப்ரூஸ் வேய்ன் கஷ்டப்பட்டதைக் கூட இதில் பிரபாஸ் செய்வதில்லை. அவர் பாட்டுக்கு சிம்பன்ஸி போல தாவித்தாவி அருவியைத் தாண்டிவிடுகிறார். அப்பட்டமான, கொடூரமான தெலுங்குப்படத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் மனதில் உறுதிப்பட்டது இந்தக் காட்சியில்தான்.

தமன்னா ஆடை
புரட்சிக்காரியை சந்திக்கிறார் ஹீரோ. அவளுக்கு ஒரு நோக்கம் உள்ளது. உடனேயே இருவருக்கும் காதல். டகாலென்று காட்சிகள் மாறி, Game of Thrones சீரீஸில் மூன்றாவது சீஸனில் ஜான் ஸ்னோ யிக்ரிட்டை சுவற்றுக்கு வெளியே சென்று சந்திப்பான் இல்லையா? அந்தக் காட்சிகள் ஓடுகின்றன. தமன்னாவின் உடைகள் வேறு அப்படியே யிக்ரிட்டை நினைவுபடுத்தவும் செய்கின்றன.

இசை காதை பதம் பார்த்தது
கொடுங்கோல் மன்னன் ஹீரோவைப் பார்த்துக் கடுப்பாகிறான். அவனிடம் இருக்கும் ஒரு அம்மணியைக் காப்பாற்றுகிறார் ஹீரோ. அவனைத் தடுக்க வருகிறார் கட்டப்பா (சத்யராஜ்). ஆனால் ஹீரோவின் முகத்தைப் பார்த்ததும், படுபயங்கர செண்ட்டிமெண்ட் இசை முழங்க, அவனது காலைத் தூக்கித் தனது (மொட்டை)த்தலையில் வைத்துக்கொள்கிறார். அந்த சீனில் உள்ள அனைவரும் மறுபடி ஆர்கசத்தில் ஓலமிடுகின்றனர். விட்டலாச்சார்யா காலத்துப் பின்னணி இசை நம் காதைப் பதம் பார்க்கிறது.

மகாபாரத கதை
இந்த இடத்தில் அமரேந்திர பாஹுபலி யார் என்று கிட்டப்பா..ச்சே.. கட்டப்பா விளக்குகிறார். ப்ளாஷ்பேக் துவக்கம். அதுவும் புதிதான ப்ளாஷ்பேக் இல்லை. அதே மஹாபாரதக்கதைதான். பாண்டுவுக்கும் திருதிராஷ்ட்ரனுக்கும் இடையே நிலவிய பிரச்னை. பாண்டுவுக்கு ஒரே மகன். அமரேந்திர பாஹுபலி. திருதிராஷ்ட்ரனுக்கு ஒரு மகன். பல்லாள (பல்வாள்) தேவன். தாயாக ரம்யா கிருஷ்ணன்.

போர் ஏன்
இந்த ப்ளாஷ்பேக்கை அப்படியே முடித்துவிட்டால் படமே முடிந்துவிடுமே? எனவே வேண்டுமென்றே வலிந்து திணிக்கப்பட்ட ஒரு போர்க்காட்சி. இந்தப் போர்க்காட்சிக்கு ஒரு காரணமே இல்லை. உதாரணமாக, த டூ டவர்ஸ் படத்திலோ அல்லது ரிடர்ன் ஆஃப் த கிங் படத்திலோ இறுதியில் வரும் போர்க்களக் காட்சிகளுக்குப் படங்களின் துவக்கத்தில் இருந்தே அருமையான பில்டப்கள் இருக்கும். ஆடியன்ஸை சிறுகச்சிறுக அப்போர்க்களங்களுக்குத் தயார்படுத்தும் முயற்சி இது. இதனால் அப்போர்கள் செயற்கையாக இரல்லாமல் மிகவும் இயல்பாகக் கதையோடு பொருந்தும்.

கதையிலேயே இல்லையாம்
ஆனால் இது அக்மார்க் தெலுங்குப் படமாயிற்றே? அதிலெல்லாம் எங்க்கே லாஜிக் இருக்கும்? திடீரென இந்தப் போர்க்காட்சிக்கு ஓரிரு வசனங்களின் மூலமே காரணம் சொல்லப்பட்டுப் போரும் துவங்கிவிடுகிறது. இந்தப் போர்க்களத்தில் வரும் எதிரிகளோ கதையில் இல்லவே இல்லாத ஆட்கள். இந்தப் போர்க்களத்துக்காகவே உருவாக்கப்பட்ட செயற்கையான கும்பல். இதுதான் பாஹுபலி in a nutshell.

கொடூர கற்பனை வறட்சி
இதுவரை நான் எழுதியதைப் படித்தாலே பாஹுபலியின் பிரச்னைகள் என்னென்ன என்பது தெரிந்துவிடும். ஒரு துளிக்கூட ‘கதை' என்னும் வஸ்துவே இல்லாத படம் இது. கதை இல்லாததால், இஷ்டத்துக்கு அலைபாய்கின்றன இதன் காட்சிகள். ஆடியன்ஸை நம்பவைக்கவேண்டும் என்ற முனைப்பு சிறிதும் இல்லாமல், கண்டபடி கொடூரமான கற்பனை வறட்சியில் எழுதப்பட்ட காட்சிகள் படம் முழுக்க இருக்கின்றன.

பிரமாண்டத்தை நம்பினார்
‘பிரம்மாண்டம்' என்பது மட்டுமே இப்படத்தைக் காப்பாற்றிவிடும் என்பதுதான் ராஜமௌலியின் எண்ணம் என்பது நன்றாகவே தெரிகிறது. ஆனால் சம்மந்தா சம்மந்தமில்லாத, மிகவும் ஆவரேஜான காட்சிகள் படம் முழுக்கவே இருந்தால் எப்படி? இரண்டாம் பாதியில் வரும் போர்க்காட்சிகளில் சற்றே பரவாயில்லாத ஸிஜி காட்சிகள் இருக்கின்றனதான். அதில் சந்தேகமில்லை. ஆனால் அவை இப்படம் விளம்பரப்படுத்தப்படுவதுபோல் ‘மிகச்சிறந்த', ‘Groundbraking' என்ற வார்த்தைகளுக்கெல்லாம் சற்றுக்கூட தகுதி இல்லாதவை. ‘தெலுங்குப்படங்களின் தரத்துக்கு இவை பரவாயில்லை' என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் தமிழ்ப்படங்களின் செய்நேர்த்திக்கு அருகேகூட பாஹுபலி வர முடியாது என்பதே உண்மை.

கர்ணன் எவ்வளவோ பெட்டர்
அறுபதுகளில் வெளிவந்த நம்மூர் ‘கர்ணன்' படம் இன்றும் அட்டகாசமாக இருக்கும். காரணம் ஸ்பெஷல் எஃபக்ட்கள் அல்ல. கதையும் திரைக்கதையும்தான். ஆனால் பாஹுபலியில் இவை இரண்டுமே மறக்கப்பட்டு, காட்சிகளில் பிரம்மாண்டம் என்பது மட்டுமே பிரதானப்படுத்தப்பட்டிருக்கிறது. எத்தனை கோடி பட்ஜெட்டை நம்மாட்களிடம் கொடுத்தாலும், அம்மா செண்ட்டிமெண்ட், சிவலிங்கம், குத்துப்பாட்டு, டூயட், எரிச்சல் வரவழைக்கும் காதல் காட்சிகள், ரத்தம் காளி சிலையின் மீது தெறிப்பது போன்ற தெலுங்கு செண்டிமெண்ட்கள் இல்லாமல் படம் வராது என்பது பாஹுபலியின்மூலம் புரிந்தது.

நான் ஈ தரமானது
ராஜமௌலி இயக்கிய ‘நான் ஈ' எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. ஒரு திரைக்கதை எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்கு நான் ஈ ஒரு மிகச்சிறந்த உதாரணம். எனது திரைக்கதை வகுப்புகளில் நான் ஈயின் சில காட்சிகளை எடுத்துக்கொண்டு விவாதிப்பது என் வழக்கம். இப்படிப்பட்ட ஒரு விறுவிறுப்பான படத்தை இயக்கிய ராஜமௌலியை பாஹுபலி போன்ற ஒரு படத்தை எடுக்கத் தூண்டியது எது? எத்தனை யோசித்தாலும் விளங்கவில்லை.

அக்மார்க் தெலுங்கு படம்
பாஹுபலி ஒரு அக்மார்க் தெலுங்குப்படம் மட்டுமே. அப்படிப்பட்ட படங்களை ரசிக்கும் ஆடியன்ஸுக்காக மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தெலுங்கில் மட்டும் வெளியானால் போட்ட பணத்தை எப்படி எடுப்பது? இதனால், ‘மாபெரும் ஸிஜி', ‘இந்தியா கண்டிராத பிரம்மாண்டம்' என்றெல்லாம் போலியாக விளம்பரம் செய்யப்பட்டு, இந்திய மக்கள் அனைவரின் தலையிலும் சுமத்தப்பட்டுள்ளது இப்படம்.

40 வருட பழைய சரக்கு
தமிழ் சினிமா பாஹுபலியையெல்லாம் தாண்டி எங்கோ சென்றுகொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் நாற்பது வருடங்கள் முன்னர் வந்திருக்கவேண்டிய பாஹுபலி போன்ற கொடூரங்கள் எல்லாம் இன்றைய காலகட்டத்தில் வெளியாகி நம் ரசனையைப் பதம் பார்ப்பது ஒரு துன்பியல் நிகழ்வு தவிர வேறில்லை. சத்யராஜ், சில காட்சிகளில் ரம்யா கிருஷ்ணன், இதன் production design ஆகியவற்றைத் தவிர பாஹுபலியில் பாராட்டப்படுவதற்கு எதுவுமே இல்லை என்பது என் கருத்து. இத்தனை வருட உழைப்பையும் இத்தனை கோடி ரூபாய்களையும் இவ்வளவு பொறுப்பற்றவகையில் வீணடித்ததை நினைத்தால் மனம் வலிக்கிறது.

கதை வேண்டாம் என்றால் ஓகே
இவ்வாறு கருந்தேள் ராஜேஷ் எழுதியுள்ளார். பின்குறிப்பாக, "‘பாஹுபலி' எனக்குப் பிடித்திருக்கிறது. எனக்கு இதுபோன்ற சண்டைக்காட்சிகள் மட்டுமே தேவை. கதை வேண்டாம் என்னும் நண்பர்களை நான் எந்த வகையிலும் இன்ஃப்ளுயன்ஸ் செய்யவில்லை" என்றும் கூறியுள்ளார்.
ஆனால், உலக சினிமாக்களை விரல் நுனியில் வைத்திருக்கும் தற்போதைய ரசிகர்கள் மத்தியில், வெறும் விளம்பரத்தால் பாகுபலி சிறப்பாக கல்லா கட்டுவதாக கூறுவது எப்படி என்று புரியவில்லை. எத்தனை விளம்பரம் கொடுத்தாலும், காட்சியிலும், திரைக்கதையிலும் புதுமை இல்லை என்பதற்காக சூப்பர் ஸ்டார் படங்களே மண்ணை கவ்வுவதை கருந்தேள் கவனிக்கவில்லை போலும்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications