கரூர் சின்னச்சாமியும் அதிமுகவுக்குத் தாவுகிறாரா?
கரூர்: திமுகவில் இருந்து கருப்பசாமி பாண்டியன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் அதிமுகவில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் கரூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சின்னச்சாமியும் அதிமுகவில் இணையப் போவதாக தகவல்கள் கூறுகின்றன.
முன்னாள் அமைச்சரும் அதிமுகவில் இருந்தவருமான சின்னசாமி அதிமுகவில் தன்னை ஒரங்கட்டியதாக கூறி அப்போதைய திமுக போக்குவரத்துதுறை அமைச்சர் கே.என்.நேரு, கரூர் முன்னாள் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சி. பழனிச்சாமி முயற்சியில் திமுகவில் இணைந்தார்.
இவர் இணையும் போது கரூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கருணாநிதி தலைமையில் இணைந்தனர். அப்போது மீண்டும் தலைமைக் கழகத்தில்தான் இணைந்துள்ளோம் என்றார் சின்னச்சாமி.
சின்னச்சாமிக்கு சென்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் எம்.பி சீட் கொடுக்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி முயற்சியால் அதிரடி தோல்வி கண்டு மு. தம்பித்துரை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினரானார்.
கரூர் திமுக மாவட்ட செயலாளர் வீரமங்கை என்று பெயர் எடுத்த வாசுகி முருகேசன் விபத்தில் மறைந்த பின்னர் மாவட்ட செயலாளர் பதவி காலியாகவே இருந்தது. இதையடுத்து திமுகவில் நடந்த கழக தேர்தலில் முன்னாள் மாஜி அமைச்சர் சின்னசாமி கரூர் மாவட்ட திமுக செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டார். ஆனால் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.கவில் முக்கியப் புள்ளியாக இருக்கும் கே.சி.பழனிச்சாமி ஆதரவோடு அப்போதைய தி.மு.க மாவட்ட பொறுப்பாளராக பதவி வகித்து வந்த நன்னியூர் ராஜேந்திரன் மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனால், தி.மு.கவில் ஓரங்கட்டுப்பட்டு வருவதாகவும், இனி திமுகவை நம்பினால் எந்த முன்னேற்றமும், தன்னை நம்பி வந்த அந்த 10 ஆயிரம் பேருக்கும் ஒன்றும் செய்ய முடியாது என்ற கோணத்திலும் ஆதரவாளர்களோடு ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தி.மு.கவில் தற்போது உள்ள சின்னசாமியை, அ.தி.மு.க மாவட்டசெயலாளரும், தமிழக போக்குவரத்துறை அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி அ.தி.மு.கவிற்கு இழுக்க தீவிரமாக முயற்சித்து வருவதாகவும் செய்தி வெளியாகி வருகிறது. ஆதலால் மீண்டும் மாஜி அமைச்சர் சின்னசாமி அ.தி.மு.கவில் இணைய வாய்ப்பு உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.