இந்த வருட “கவிஞர் திருநாள் விருது” கவிஞர் சல்மாவிற்கு- வழங்குகிறார் வைரமுத்து!
சென்னை: சென்னையில் வருடாவருடம் நடைபெறும் கவிஞர்கள் திருநாள் விருதுக்கு, இந்தாண்டு கவிஞர் சல்மா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு கவிஞர் வைரமுத்து பணமுடிப்பும், பட்டயமும் வழங்குகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளான ஜூலை 13 ஆம் தேதியை "கவிஞர்கள் திருநாள்" என்று வெற்றி தமிழர் பேரவை கொண்டாடி வருகிறது. இந்தாண்டு கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாள் விழா சென்னை கோடம்பாக்கம் பொன்மணி மாளிகை திருமண மாளிகையில் 12 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது.

விழாவிற்கு, குஜராத் ஹைகோர்ட்டு முன்னாள் நீதிபதி பு.ரா.கோகுலகிஷ்ணன் தலைமை தாங்குகிறார். எழுத்தாளர் சிவசங்கரி, மரபின் மைந்தன் முத்தையா, மலேசிய எழுத்தாளர் பெ.ராஜேந்திரன், ஈழத்து எழுத்தாளர் கல்லாறு சதீஷ், கபிலன் வைரமுத்து ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
தனது பிறந்தநாள் தினத்தன்று சிறந்த கவிஞராக ஒருவரை தேர்வு செய்து அவருக்கு "கவிஞர்கள் திருநாள்" விருதினை கவிஞர் வைரமுத்து வழங்கி வருகிறார். இதுவரையில் இந்த விருதினை கவிஞர்கள் சுரதா, நா.காமராசன், முத்துலிங்கம், தமிழச்சி தங்கபாண்டியன், இன்குலாப், காசி ஆனந்தன், வெண்ணிலா, கலாப்ரியா, ஈரோடு தமிழன்பன், இளையபாரதி உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்.
அந்த வகையில் 2015 ஆம் ஆண்டுக்கான "கவிஞர்கள் திருநாள்" விருதுக்கு, கவிஞர் சல்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ரூபாய் 25 ஆயிரம் பணமுடிப்பும், பட்டயத்தையும் கவிஞர் வைரமுத்து தனது பிறந்தநாள் விழாவில் வழங்க உள்ளார். விழாவில், கவிஞர் வைரமுத்துவின் மகனும், கவிஞருமான மதன் கார்க்கி நன்றியுரை ஆற்றுகிறார்.
தனது பிறந்த நாளான 13 ஆம் தேதியன்று சென்னை கடற்கரையில் உள்ள கவிஞர்கள் சிலைகளுக்கும், தியாகராயநகரில் உள்ள கவிஞர் கண்ணதாசன் சிலைக்கும் கவிஞர் வைரமுத்து மலரஞ்சலி செலுத்துகிறார்.












Click it and Unblock the Notifications