காய்கறிகள் பழங்களில் நச்சுத்தன்மை: தமிழக காய்கறிகளுக்கு கேரளா தடை- நள்ளிரவு முதல் அமல்
தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களில் நச்சுத்தன்மை இருப்பதாக கூறி கேரள அரசு விதித்த தடை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகள், ரசாயனம் பயன்படுத்தி விளைவித்த, பழங்கள், காய்கறிகள், கேரளாவுக்கு வருவதை தடுக்கும் வகையில், கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக, தமிழ்நாடு கர்நாடகா உட்பட வெளிமாநிலங்களில் இருந்து வரும் பழங்கள், காய்கறிகள் நிரம்பிய வாகனங்களை சோதனையிட, சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
காய்கறி, பழங்களின் சாம்பிள் பெறும் சிறப்பு குழு, அதே இடத்தில், விஞ்ஞான ரீதியில் சோதனையிடும். பூச்சிக்கொல்லி மருந்து, ரசாயனம் பயன்படுத்தவில்லை என உறுதியானால் மட்டுமே, அந்த வாகனங்கள் கேரளாவுக்கு செல்ல அனுமதிக்கப்படும்.

தர நிர்ணய சான்று
தமிழகம் மற்றும் இதர மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் சான்று சமர்ப்பிக்க வேண்டும் என்று கேரள அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

சோதனைச் சாவடிகள்
இந்த சான்றை சமர்ப்பித்தால் மட்டுமே இனி கேரளாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படும் என மாநில எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டன. மேலும் இந்த சான்று பெற்று வர ஒருவார கால அவகாசம் அளிக்கப்பட்டது.

நள்ளிரவு முதல் அமல்
இந்த அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் முடிந்ததால் கேரள அரசு விதித்த தடை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து, வழக்கமாக 120 லாரிகளில் எடுத்து செல்லப்படும் காய்கறிகளுக்கு பதிலாக, 20க்கும் குறைவான லாரிகள் மட்டுமே சென்றதாக கூறப்படுகிறது.

கர்நாடகா காய்கறிகள்
கர்நாடக மாநிலத்திற்கு கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் காய்கறிகள், பழங்களுக்கு கடந்த ஜூலை 15ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாநில விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நுழைய அனுமதிக்க மாட்டோம்
கேரள உணவுத்துறையினர் கூறுகையில், 'காய்கறிகள், பழங்களுடன் வரும் வாகனங்கள், எங்கிருந்து கொண்டு வருகின்றனர், அவை விளைவிக்கப்பட்ட இடம், யாரிடம் இருந்து வாங்கப்பட்டது, வாகனத்தின் பதிவு உட்பட அனைத்து ஆவணங்களையும் வைத்திருக்க வேண்டும். ஆவணங்கள் இல்லையெனில், எந்த காரணத்தை முன்னிட்டும், கேரளாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படாது' என்று கூறியுள்ளனர்.

ஆகஸ்ட் 4 முதல் சோதனை
இதனிடையே, தமிழக காய்கறிகள் உணவு தர தகுதி சான்றிதழ் பெற்றுள்ளதா என ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் சோதனை நடத்தப்படும் என்று கேரளா அறிவித்துள்ளது. இது தொடர்பாக இடுக்கி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பேபிச்சன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வரும் ஆகஸ்ட் 4ம் தேதி பிறகு தமிழக காய்கறிகள் உணவு தர சான்றிதழ் பெற்றுள்ளதா என சோதிக்கப்படும்.

குமுளி வழியாக காய்கறிகள்
வாரம் ஒரு முறை ஏதேனும் ஒரு வாகனத்தின் காய்கறிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்படும். மேலும் உணவு தர சான்றிதழை தமிழகம் மற்றும் கேரளாவில் பெறலாம் என்று கூறியுள்ளார்.
கேரள அரசின் இந்த புதிய முடிவால் தற்போது குமுளி வழியாக வழக்கம் போல் காய்கறிகள் கேரளாவிற்குள் செல்கின்றன.












Click it and Unblock the Notifications