உப்புக்காக அலையும் 'ஒற்றை கொம்பன்'! - ஏலக்காய் எஸ்டேட் முதலாளிகளின் அட்டகாசம்
உப்புக்காக அலையும் பெண் யானையை கேரள ஏலக்காய் எஸ்டேட் முதலாளிகள் தமிழக எல்லைக்குள் துரத்தி விடுகின்றனர்.
Recommended Video
சென்னை: கேரள எல்லையில் உள்ள தமிழகப் பகுதிகளைப் பதம் பார்த்து வருகிறது ஒற்றை யானை. ' தேவாரம் மலையடிவாரத்தில் உள்ள தோட்டங்களில் உற்சாகமாக வலம் வருகிறது ஒற்றை பெண் யானை ஒன்று. உப்பு மற்றும் அரிசிக்காக வீடுகளை துவம்சம் செய்வதால் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் பொதுமக்கள்' என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள்.
கேரள வனப்பகுதியில் அட்டகாசம் செய்து வரும் யானைகளை தமிழக எல்லைக்குள் விரட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர் சில தனியார் முதலாளிகள். கடந்த சில நாட்களாக தேவாரம் மலையடிவாரத்தில் உள்ள தோட்டங்களில் ஒற்றை பெண் யானை ஒன்று வலம் வந்து கொண்டிருக்கிறது.
இந்த யானையை விரட்ட முடியாமல் தவிக்கின்றனர் தமிழக வனத்துறை அதிகாரிகள். தேவாரம் பகுதியில் உள்ள சதுரங்கப்பாறை, வெள்ளப்பாறை, மந்திப்பாறை உள்ளிட்ட இடங்களில் யானையின் நடமாட்டத்தைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்தப் பணியில் கம்பம் உதவி வனப்பாதுகாவலர், ரேஞ்சர்கள், தேனி மாவட்ட டி.எஃப்.ஓ கவுதம் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். ஆனால், ஒற்றை யானையைக் கண்டறிய முடியாமல் திணறி வருகின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய வனத்துறை அதிகாரி ஒருவர், " கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிகப்படியான ஈரப்பதம் இருப்பதால் அட்டைப் பூச்சிகளின் கடிகளில் இருந்து தப்பிப்பதே பெரும்பாடாக இருக்கிறது. ஒற்றை யானையைக் கண்ணில் பார்க்கும் பொதுமக்கள், பட்டாசுகளை வெடித்து கேரள வனப்பகுதிக்குள் துரத்திவிட்டாலும், அங்குள்ள ஏலக்காய் எஸ்டேட் உரிமையாளர்கள் அதே யானையை தமிழகப் பகுதிக்குள் விரட்டியடிக்கின்றனர். இதனால் போதுமான உணவில்லாமல் தவித்து வருகிறது அந்த யானை.
அந்த யானைக்கு இரைதான் பிரச்னை. தேவாரம் பகுதி என்பது சமமான நிலப்பகுதியாக இருக்கிறது. இங்குள்ள வீடுகளில் இருக்கும் உப்பைத் தேடித்தான் அந்த யானை வருகிறது.
பொதுவாக, யானைகளுக்கு உப்பு என்றால் மிகவும் விருப்பம். அதன் உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள் இதன் மூலம் கிடைக்கிறது. உப்பின் சுவைக்காகவே வீடுகளைத் தேடி வருகிறது. இதனால் உயிர் பயத்தில் ஒவ்வொரு இரவையும் பொதுமக்கள் கழிக்கின்றனர்.
அந்த யானையை எப்படியாவது வேறு பகுதிக்கு விரட்டிவிட வேண்டும் என இரவு பகலாகப் பாடுபட்டு வருகிறோம். கேரள வனத்துறை அதிகாரிகளுக்கும் இதுதொடர்பாக தகவல் தெரிவித்திருக்கிறோம். கேரளாவில் உள்ள ஏலக்காய் எஸ்டேட் முதலாளிகள், தங்களுக்கு பாதிப்பு வரக் கூடாது என்பற்காக அந்த ஒற்றை யானையை நமது பகுதிக்குள் துரத்தியடிக்கின்றனர்.
ஏதேனும் அசம்பாவிதம் நேருவதற்குள் ஒற்றை யானையை காட்டுப் பகுதிக்குள் துரத்திவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என்றார் கவலையுடன்.