முல்லைப்பெரியாறில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் விவகாரம்... தடையை நீக்க கோரி கேரள அரசு மனு
சென்னை : முல்லைப்பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் கேரள அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.
அதில், வாகன நிறுத்துமிடத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேரள அரசு கோரியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் பசுமை தீர்ப்பாயம் விதித்த இடைக்கால உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேரள அரசு வலியுறுத்தியுள்ளது.
வாகன நிறுத்தும் இடம் தொடர்பாக மத்திய நில அளவைத்துறை தாக்கல் செய்த அறிக்கைக்கு எதிராக பெரியார் புலிகள் வனக்காப்பக அறக்கட்டளையும் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் தமிழக, கேரள அரசுகளின் தலைமை வழக்கறிஞர்கள் ஆஜராவதற்கு ஏதுவாக வழக்கின் விசாரணையை செப்டம்பர் 7ஆம் தேதிக்கு பசுமை தீர்ப்பாயம் ஒத்திவைத்துள்ளது.
மேலும், நில அளவைக்காக நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக 3 லட்சத்து 49ஆயிரம் ரூபாய் செலவாகியுள்ளதால், அந்த தொகையினை இருமாநில அரசுகளும் ஒரு மாத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.