பாலருவியில் எந்த வசதியுமில்லை... கூடுதல் கட்டணம் வசூலிப்பதா? கேரள வனத்துறைக்கு எதிராக போர்க்கொடி
செங்கோட்டை: பாலருவியில் எந்த வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காத கேரள வனத்துறையினர், கட்டணத்தை மட்டும் கூடுதலாக வசூலிப்பது ஏன் என்று வன பாதுகாப்பு சமிதி அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர். சிறுவர்களுக்கும் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்தும் இந்த அமைப்பினர் பணிக்கு செல்லாமல் புறக்கணித்தனர்.
தமிழக கேரளா எல்லையில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் செங்கோட்டை அருகே ஆரியங்காவு என்ற பகுதி உள்ளது. இவ்வூரில் இருந்து சுமார் 7கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பாலருவி. இந்த பாலருவிப் பகுதியை பராமரிக்கவும்,பாதுகாக்கவும்சில ஆண்டுகளுக்கு முன் கேரள வனத்துறை உள்ளூர் மக்களை கொண்டு "வனபாதுகாப்பு சமிதி" என்ற அமைப்பை ஏற்படுத்தியது. இந்த அமைப்பில் 250பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இவர்களில் ஆண்டுக்கொருமுறை 30பேர்களைத் தேர்ந்தேடுத்து அவர்களை இந்த பாலருவிப் பகுதியையும், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்களையும் கவனிக்க தேர்ந்தெடுப்பது வழக்கம்,இந்த ஆண்டு ஒரு குழுவை ஏற்படுத்தினர். அதன்படி இந்தக்குழுவினர் கடந்த மாதம் பொறுப்பேற்றனர். அதில் தலைவர்,துணைத்தலைவர்,பொருளாளர் ஆகிய பதவிகள் மக்களுக்கும்,செயலாளர் பதவி வனத்துறை அதிகரிக்கும் வழங்கப்படுவது வழக்கம் ஆனால் இந்த முறை அப்படி பொறுப்புக்கள் வழங்கப்படவில்லை.
குற்றாலம் வரும் தமிழக சுற்றுலாப் பயணிகள் இந்த அருவிக்கும் திரண்டு வருவது வழக்கம்,இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு உடைமாற்றும் வசதி,கழிப்பிட வசதி,வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இன்றி,குளிக்க வருபவர்களிடம் ஒரு நபருக்கு கட்டணமாக முன்னர் ரூபாய் 15வசூலிக்கப்பட்டது. தற்போது அந்த கட்டணம் ரூபாய் 30ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
13வயதுக்குட்பட்ட சிறுவர்,சிறுமிகளுக்கு கட்டணம் கிடையாது. தற்போது அவர்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனைக் கண்டித்தும் வனப்பாதுகாப்பு சமிதி அமைப்பினர் இன்று அருவிக்கு செல்லும் பாதையின் முகப்பு பகுதியில் பணிக்கு செல்லாமல் புறக்கணித்தனர். கேரள வனத்துறையைக் கண்டித்து -வன பாதுக்காப்பு அமைப்பினர் போர்க்கொடி தூக்கியுள்ளதால் அங்கு பரப்பரப்பு ஏற்ப்பட்டுள்ளது.