கேரளா: கட்சி கட்டளையை ஏற்று திருமணம்... மணமகளை வேட்பாளராக்கிய இளைஞர்
சென்னை: கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேலிடம் பிறப்பித்த கட்டளையை ஏற்று இளைஞர் ஒருவர் மணமகளையே வேட்பாளராக நிறுத்தியுள்ளார்.
கேரளாவில் அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்வைத்து இடதுசாரிகளின் கோட்டையான நெடுவதூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ்என்ற இளைஞருக்கு இரட்டை யோகம் அடித்துள்ளது.
ராஜேஷின் தந்தை ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் நீண்டகாலமாக இருந்து வருகிறார். இத்தேர்தலில் போட்டியிட அவர் வாய்ப்பு கேட்டிருந்தார்.
ஆனால் ராஜேந்திரன் மகன் ராஜேஷூக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்று கட்சி மேலிடம் உறுதி அளித்திருந்தது. நெடுவத்தூர் கிராம பஞ்சாயத்து எஸ்.சி.க்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது எஸ்.சி. பெண்களுக்கான தொகுதியாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்சி மேலிடம் ராஜேஷுக்கு இட்டுள்ள கட்டளை என்ன தெரியுமா? உடனே திருமணம் செய்யுங்க.. உங்க மனைவியை தேர்தலில் நிறுத்தலாம் என்பதுதான்..
கட்சியின் இந்த கட்டளையையும் ஏற்றுக் கொண்ட ராஜேஷ் தனது திருமணத்தை வரும் 19-ந் தேதி நடத்துகிறார். மணமகள் மஹிஜாவுடன் வீடு வீடாக சென்று கல்யாண பத்திரிகை கொடுக்கும் கையோடு ஓட்டு போடச் சொல்லியும் வாக்கு சேகரித்து வருகின்றனர் இத்தம்பதி..
இது எப்படி!