"நடு ரோட்டுல வச்சு நானே வெட்டுவேன்"... அப்படிச் சொல்லிய அமைச்சருக்கும் சீட் கொடுத்த "அம்மா"!
சென்னை: நடு ரோட்டில் வச்சு நானே வெட்டுவேன் என்று கொலை வெறியுடன் பேசி பரபரப்பை ஏற்படுத்தியவரான தமிழக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கும் சீட் கொடுத்து அழகு பார்த்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
"அம்மா" பெருந்தன்மையானவர், ஈர மனசுக்காரர், தாராள மனசுக்காரர் என்று அதிமுகவினர் சிலாகித்துக் கூற என்ன காரணம் என்று தெரியாதவர்கள் இன்றைய அதிமுக வேட்பாளர் பட்டியலை எடுத்து வைத்துக் கொண்டு ஓரமாகப் போய் உட்கார்ந்து ஆற அமர அலசிப் பார்த்தால் நிறையவே புரிந்து கொள்ளலாம்.

யாரெல்லாம் சர்ச்சையில் சிக்கினார்களோ அவர்களுக்கெல்லாம் சீட் கொடுத்து அவர்களுக்கு மறு வாழ்வு கொடுத்துள்ளார் ஜெயலலிதா. அப்படி ஜெயலலிதாவால் வாழ்க்கை கொடுக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவர் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி.
கேடிஆர் என்று செல்லமாக அழைக்கப்படும் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் சமீபத்திய மிரட்டல் பேச்சு வாட்ஸ் ஆப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதில் சிவகாசி ஒன்றியச் செயலாளர் பைபாஸ் ராமசாமி என்பவரைப் பற்றி சிவக்குமார் என்பவரிடம் படு மிரட்டலாக பேசியிருந்தார் பாலாஜி.
அவனை சும்மா இருக்கச் சொல்லுங்க. இல்லாட்டி வீடு புகுந்து வெட்டிருவேன். நானே வெட்டுவேன். என் கிட்ட வெட்டுறதுக்கு நூறு பேர் இருக்கான் என்று ஆரம்பித்து "அந்த மகன் இந்த மகன்" என்று ஆபாசமாகவும் பேசி கலந்து கட்டி கலக்கியிருந்தார் பாலாஜி.
இதுகுறித்து கருப்பு எழுத்துக் கழகம் என்ற அமைப்பினர் தேர்தல் ஆணையத்திலும் புகார் கொடுத்துள்ளனர். ராஜேந்திர பாலாஜி தேர்தலில் நிற்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜிக்கு அவர் கேட்ட சிவகாசி தொகுதியையே கொடுத்து அழகு பார்த்துள்ளார் ஜெயலலிதா. ஒருவேளை இந்த ஆடியோவை ஜெயலலிதா கேட்கவில்லையோ என்னவோ!












Click it and Unblock the Notifications