குலசை தசரா திருவிழா நாளை சூரசம்ஹராரம் - குவியும் பக்தர்கள்
தூத்துக்குடி: குலசேகரப்பட்டிணத்தில் தசரா திருவிழா களை கட்டியுள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை நடைபெறுவதை முன்னிட்டு வேடம் அணிந்த பக்தர்கள் அங்கு குவிய தொடங்கியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்த பெற்ற குலசேகரப்பட்டிணத்தில் ஆண்டுதோறும் தசரா விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா அக்டோபர் 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
9ம் நாளான இன்று அம்மன் கலைமகள் கோலத்தில் சப்பரத்தில் வீதி உலா நடைபெற்றது. நாளை காலை 10.30 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகமும், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரஸ்வரர் கோயிலுக்கு எழுந்தருளி மகிசா சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 1 மணிக்குகடற்கரை மேடையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடக்கிறது.
இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியை காண பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள பக்தர்கள் குலசேகரப்பட்டிணம் கடற்கரையில் குவிந்துள்ளனர். காப்பு கட்டி விரதம் இருந்து வேடம் அணிந்த வரும் பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் காணிக்கை வசூலித்து வருகின்றனர்.
குலசேகரப்பட்டிணம், திருச்செந்தூர் மட்டுமல்லாது, தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பக்தர்கள்கூட்டமாக காணப்படுகிறது. வேடம் அணிந்து வரும் பக்தர்களும் குலசை விரைந்து வருகின்றனர். இதனால் அங்கு கட்டுகடங்காத கூட்டம் காணப்படுகிறது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.