புலவர் பழனிச்சாமிக்கு மொத்தம் 940 வருட சிறை.. ஆயுள் முழுக்க சிறையில் கழிக்கும் நிலை!
தஞ்சாவூர்: கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளிக்கூட தீவிபத்தில் அதன் நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்குத்தான் அதிக அளவிலான சிறைத் தண்டனை கிடைத்துள்ளது.
அவருக்கு ஆயுள் தண்டனை போக மொத்தம் 940 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார் தஞ்சாவூர் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி முகம்மது அலி. இந்த தண்டனையை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். அதாவது ஆயுள் காலம் முழுவதும் அவர் சிறையில் இருக்க நேரிடும்.
94 குழந்தைகள் பலியான கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்து வழக்கில், தஞ்சை கோர்ட் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
10 வருடத்திற்குப் பிறகு
சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
11 பேர் விடுதலை
மொத்தம் குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில் பழனிச்சாமி உள்பட 10 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
பழனிச்சாமிக்குத்தான் அதிக தண்டனை
பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை, ஒரு குழந்தைக்கு 10 ஆண்டு வீதம் பலியான 94 குழந்தைகளுக்கும் சேர்த்து மொத்தம் 940 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.51 லட்சத்து 65 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டது. 10 பேரில் இவருக்குத்தான் அதிக அளவிலான தண்டனை கிடைத்துள்ளது.
ஆயுள் முழுவதும் சிறைதான்
இந்தத் தண்டனையை பழனிச்சாமி ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அவர் ஆயுள் தண்டனைக் கைதியாக கருதப்படுவார். தற்போது ஆயுள் தண்டனைக் கைதிகளை குறித்த காலத்திற்குப் பின்னர் விடுவிக்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.