கும்பகோணம் தீவிபத்து வழக்கு.. தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய ஆய்வு: அமைச்சர் சண்முகம்
கும்பகோணம் தீ விபத்து வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தமிழக சட்ட அமைச்சர் சி. வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னை: கும்பகோணம் பள்ளியொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 94 குழந்தைகள் எரிந்து சாம்பலான வழக்கின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்வதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகச் சட்ட அமைச்சர் சி. வி. சண்முகம் கூறியுள்ளார்.
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி பயங்கர தீ விபத்து. இந்தக் கோர விபத்தில் 94 குழந்தைகள் எரிந்து சாம்பலானார்கள்.
இதனையடுத்து, பள்ளி தாளாளர் உட்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
தண்டனை
இந்த வழக்கில், 2014ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் 10 பேருக்குச் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
மேல்முறையீடு
இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில், தண்டனைப் பெற்றவர்கள் மேல்முறையீடு செய்தனர். அதே சமயம் 11 பேரை கீழ்கோர்ட்டு விடுதலை செய்ததை எதிர்த்து கும்பகோணம் போலீசார் மேல்முறையீடு செய்தனர்.
விடுதலை
மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், பள்ளியின் நிறுவனருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை குறைத்தும், தலைமை ஆசிரியர் உள்பட 7 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தது. இதனால் தமிழக மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
மேல்முறையீடு
இந்நிலையில், இந்த வழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தமிழக சட்ட அமைச்சர் சி. வி. சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் சமபந்தி விருந்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் இதனைக் கூறினார்.