கும்பகோணம் பள்ளி தீ விபத்து: குழந்தைகள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை
சென்னை: கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றத்தில் நீதிபதி வெங்கட்ராமன் குழு பரிந்துரை செய்தது. காயமடைந்த 3 குழந்தைகளுக்கு தலா ரூ.6 லட்சம், மற்ற 3 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்துள்ளனர். மேலும் மற்ற 12 குழந்தைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க பரிந்துரை செய்துள்ளது. பின்னர் பரிசீலித்து கருத்து தெரிவிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஒரு வார கால அவகாசம் கொடுத்துள்ளது.
கும்பகோணத்தில் ஒரே வளாகத்தில் செயல்பட்ட ஸ்ரீகிருஷ்ணா மற்றும் சரஸ்வதி நர்சரி பள்ளிகளில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த பயங்கர தீ விபத்தில் பள்ளியில் பயின்ற குழந்தைகள் மற்றும் ஆசிரியை என 94 பேர் உடல் கருகி இறந்தனர். 16 குழந்தைகள் தீக்காயங்களுடன் உயிர் தப்பினர். இறந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடாக தரப்பட்டது.
இந்த விபத்து குறித்து தொடரப்பட்ட வழக்கில் பத்தாண்டுகளுக்குப் பின்னர் கடந்த 2014ம் ஆண்டு பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும் தாளாளர் சரஸ்வதி உட்பட மற்றவர்களுக்கு 5 ஆண்டு தண்டனையும் வழங்கப்பட்டது.
பலியானவர்களின் குடும்பத் துக்கும், படுகாயமடைந்த குழந்தைகளுக்கும் இந்த தொகை போதாது. கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி குழந்தைகளின் பெற்றோர் சார்பில் கே.இன்பராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன், ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமனை விசாரணை ஆணையராக நியமித்து 2014ல் உத்தரவிட்டார். இந்த ஒருநபர் ஆணையத்தை ஏற்கமுடியாது என தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, தீ விபத்தில் இறந்த, காயமடைந்த குழந்தைகளின் பெற்றோர், பல துறைகளை சேர்ந்த அதிகாரிகளிடம் ஆணையத் தலைவர் கே.வெங்கட்ராமன் விசாரணை நடத்தினார். இதையடுத்து, சீலிடப்பட்ட தனது அறிக்கையை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பொன்.கலையரசனிடம் அவர் கடந்த மார்ச் 31ம் தேதி தாக்கல் செய்தார். வழக்கு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றத்தில் நீதிபதி வெங்கட்ராமன் குழு பரிந்துரை செய்தது. காயமடைந்த 3 குழந்தைகளுக்கு தலா ரூ.6 லட்சம், மற்ற 3 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்துள்ளனர். மேலும் மற்ற 12 குழந்தைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை தொடர்பாக பரிசீலித்து கருத்து தெரிவிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஒரு வார கால அவகாசம் கொடுத்துள்ளது.