ப.சி, கா.சி. ஆப்சென்ட்.. குஷ்பு பிரசன்ட்.. சத்தியமூர்த்தி பவனில் காங். கூட்டம்... நிறைய தீர்மானங்கள்
சென்னை: டெல்லி போயிருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை திரும்பிய அதே வேகத்தில் மாநில செயற்குழுக் கூட்டத்தை இன்று கூட்டி நடத்தினார். அதில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் வரவில்லை. ஆனால் நடிகை குஷ்பு வந்திருந்தார். முதல் வரிசையில் உட்கார்ந்து கூட்டத்தை வேடிக்கை பார்த்தார்.
இளங்கோவன் தலைமையில் நடந்த இந்த செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு 78 செயற்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அவர்களில் 62 பேர் கலந்து கொண்டனராம்.
முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுதர்சன நாச்சியப்பன், திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா, மாநில பொருளாளர் நாசே ராமசந்திரன், ஊடக தொடர்பு தலைவர் கோபண்ணா, சிறப்பு அழைப்பாளர்களாக குஷ்பு, வசந்தகுமார், எம்.எல்.ஏ. விஜயதாரணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேசமயம், ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. டெல்லியில் வேலை என்று ப.சிதம்பரமும், வெளியூர் போய் விட்டதாக கூறி கார்த்தியும் வரவில்லையாம். கூட்டத்தில தீர்மானங்கள் போடப்பட்டன.
கூட்டம் காட்டிய ராகுலுக்கு பாராட்டு
மத்தியில் ஆட்சி செய்து வருகிற பா.ஜ.க. கொண்டு வந்த நில கையகப்படுத்துதல் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் இருக்கிற விவசாயிகளை திரட்டி லட்சக்கணக்கானோர் பங்கேற்கிற பேரணியை தலைநகர் டெல்லியில் நடத்தி காட்டியதற்காக சோனியா காந்தியையும், ராகுல்காந்தியையும் செயற்குழு மனதார பாராட்டுகிறது. மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக மக்களை திரட்டுகிற பணியில் மகத்தான வெற்றி பெறுவார்கள் என்கிற நம்பிக்கை செயற்குழு வெளிப்படுத்துகிறது.
2016 தேர்தலுக்கான அரசியல் பாதை
மத்தியில் நடைபெறும் பா.ஜ.க. ஆட்சியின் மக்கள் விரோதப்போக்கையும், தமிழகத்தில் நடைபெற்று வருகிற அ.தி.மு.க.வின் ஊழல் ஆட்சி குறித்தும் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு தமிழக காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. இதுவே 2016 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் பாதையாக இருக்க வேண்டும்.
எங்கும் ஊழல், எதிலும் ஊழல்
தமிழ்நாட்டில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்று அனைத்து துறைகளிலும் நடந்து வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் மீது நாமும் தொடர்ந்து ஊழல் பட்டியலை வெளியிட்டு வருகிறோம். ஆனால் ஆட்சியாளர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மீது பொய் வழக்கு போட்டு அச்சுறுத்தப் பார்க்கிறார்கள். இந்த ஊழல்கள் குறித்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தி, ஆளுநரிடம் ஆதாரத்துடன் ஊழல் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்.
மது தயாரிக்க விற்கக் கூடாது
அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தமது எல்லைக்குள் மது தயாரிக்கவோ, விற்கவோ கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றச் செய்ய வேண்டும். மதுவால் விளையும் தீமைகளை எடுத்துச் சொல்லி தாம் வாழும் உள்ளாட்சி எல்லைக்குள் மது கூடாது என தீர்மானம் நிறைவேற்றுங்கள் என வேண்டும் மனுவில் மக்களிடம் கையெழுத்துக்களை பெற வேண்டும். இந்த மனுக்களை பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஜூலை 15-ல் உள்ளாட்சித் தலைமைப் பொறுப்பிலிருப்பவர்களிடம் அளிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் போடப்பட்டன.
ஜெயகாந்தனுக்கு அஞ்சலி
செயற்குழுக் கூட்டத்தில் சமீபத்தில் மரணம் அடைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன், கிள்ளிவளவன் ஆகியோருக்கு அஞ்சலி தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்களுக்கும் இரங்கல், தெரிவிக்கப்பட்டது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த முன் வராத மத்திய அரசுக்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.