அஷ்டமி நாளில் அட்சய திரிதியை போல நகை வியாபாரம்... எல்லாம் மோடி எபெக்ட்
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்த உடன், பணத்தை எடுத்துக்கொண்டு நகைக்கடைகளிலும், பட்டுப்புடவைக் கடைகளிலும் குவிந்தனர். பண்டிகை காலம் போல வியாபாரம் விடிய விடிய களை
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் இனி பயன்படாது என செவ்வாய்கிழமை இரவு அறிவித்தார். இதை கேட்டு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிர்ச்சியைடைந்தனர். அஷ்டமி நாள் என்று கூட பார்க்காமல் நகைக்கடைகளுக்குச் சென்று தங்கத்தை வாங்கிக் குவித்தனர்.
வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க்குகளிலும், குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளிலும் மாற்றி கொண்டனர். ஆனால், போதிய அளவுக்கு அந்த பணத்தை மாற்ற முடியவில்லை. நேரமும் போதவில்லை.
அதிகளவு பணத்தை வீடுகளில் பதுக்கி வைத்து இருந்த பணக்காக மக்கள், நள்ளிரவிலும் நகைக்கடைக்கு சென்று, தங்களுக்கு வேண்டிய டிசைன்களில் நகைகளை வாங்கி கொண்டனர். பொதுவாக அஷ்டமி நாளில் எதுவும் நகைகள் வாங்க மாட்டார்கள் நல்ல செயல்களும் செய்ய மாட்டார்கள். ஆனால் மோடி அறிவித்தது செவ்வாய்கிழமை இரவு, அதையும் கருத்தில் கொள்ளாமல் நகைக்கடைகள், புடவை கடைகளுக்குச் சென்று மக்கள் வாங்கி குவித்தனர்.
தீபாவளி, பொங்கல், அக்ஷய திருதியை உள்பட விசேஷ நாட்களில் மட்டும் நகைக்கடைகளில் கூட்டம் திரளும். ஆனால் அரசு, 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்ததும், கையில் உள்ள பணத்தை சில்லறையாக மாற்ற முடியததால், ஏராளமான மக்கள் நகைக்கடையில் திரண்டனர். தி.நகர், மயிலாப்பூர், புரசைவாக்கம் உள்பட பல பகுதிகளில் விடிய விடிய நகைக்கடைகளில் வியாபாரம் களைகட்டியது. நகைக்கடைக்காரர்களும் உற்சாகமாக வியாபாரம் செய்தனர்.
தமிழகம் மட்டுமல்லாது நாடுமுழுவதும் முக்கிய நகரங்களில் நள்ளிரவு 12.00 மணிவரை வியபாரம் செய்தனர். மூன்று மணிநேரத்தில் ஒரு மாத வியாபாரம் நடந்ததாகச் சொல்கிறார்கள் நகைக்கடைக்காரர்கள் கடை ஊழியர்கள். விளம்பரம் எதுவும் இல்லாமலேயே நகை வியாபாரம் கூடியதால் புதன்கிழமை தங்கம் ஒரு சவரனுக்கு 1450 வரை அதிகரித்தது.
கணவரின் பதுக்கல் பணம் எல்லாம் தங்கமாகவும், பட்டுப்புடவையாகவும் மாறியுள்ளால் பெண்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதே நேரத்தில் கணவரின் பாடுதான் படு கவலையாகிவிட்டது. பலரது வீடுகளிலும் கறுப்பு பணம் எல்லாம் கறுப்பு தங்கமாக மாறிவிட்டது என்பதுதான் உண்மை.